மதுரை: திமுக.,வில் இருந்து யார் அதிமுக.,வுக்கு வந்தாலும் வரவேற்போம்; சசிகலா பற்றி எங்களுக்கு கவலை யில்லை.சசிகலா வெளியே வந்தாலும் அதிமுக மிகப்பெரிய வலுப் பெறும் என அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.
மதுரை மாவட்டம் பரவை பேரூராட்சி கண்மாய் பகுதியில் 90 லட்சம் மதிப்பில் நடைபெறும் குடிமராமத்து பணிகளை கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு நேரில் ஆய்வு செய்தார்.
பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “கண்மாய் நீர்பிடிப்பு பகுதியில் ஆக்கிரமிப்பு இருந்தால் அகற்றப்படும். கடந்தாண்டு மழை நன்றாக பெய்து மதுரையில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்தது. ரூ.1,428 கோடி ஒதுக்கப்பட்டு நீர் நிலைகள் மேம்படுத்தப்படுகின்றன.
முல்லை பெரியாறு, வைகை அணை ஆகியவற்றின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. கண்மாய்கள், குளம், ஏரிகளில் நீர் நிரப்பப்பட்டு தண்ணீர் சேமிக்கப்பட்டு நீர் தேவையை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மதுரை வைகையாற்றில் ரூ.17 கோடியில் கொடிமங்கலம் பகுதியில் தடுப்பணை கட்டப்பட்டு விவசாயிகளுக்கு பாசன வசதி பெற நடவடிக்கை எடுத்துள்ளோம்.
திமுக ஒரு குடும்ப கட்சி. இது வாரிசுப் படி உள்ளது. திறமை இல்லாத மு.க.ஸ்டாலின் திமுக தலைவராக உள்ளார். தன்னை தவிர கட்சியில் வேறு யாரும் தலையிட மாட்டார்கள் என்றார்.திமுகவினரிடையே ஒற்றுமையில்லை. மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி தற்போது கட்சியில் வளர்ந்து வருகிறார்.
கு.க.செல்வம் திமுகவிலிருந்து பாஜகவிற்கு சென்றது அவரது விருப்பம்.எங்களது கருத்தை ஏற்று அதிமுகவிற்கு திமுகவினர் யார் வந்தாலும் வரவேற்போம். பாஜக நயினார் நாகேந்திரன் அதிமுகவிற்கு வந்தால் வரவேற்போம்.
சசிகலா பற்றி எங்களுக்கு கவலையில்லை.சசிகலா வெளியே வந்தாலும் அதிமுக மிகப்பெரிய வலுப் பெறும். அதிமுகவில் தகவல் தொழில்நுட்ப பிரிவு நன்றாக செயல்பட்டு வருகிறது.
சட்டமன்ற தேர்தலில் அதிமுக புயல் வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. இரு பெரும் தலைவர்கள், இபிஎஸ்-ஒபிஎஸ் தலைமையில் கட்சி நடைபெறும். அதில் மாற்று கருத்தே இல்லை. சட்டமன்ற உறுப்பினர்கள் கூடி யாரை முதல்வர் என்கிறார்களோ அவரே தமிழக முதல்வர்” என்று கூறினார்.
- செய்தி: ரவிச்சந்திரன், மதுரை