விநாயகர் கடவுள் யானை முகமும், மனித உடலும், நான்கு கரங்களும், பெருத்த வயிறும், முறம் போன்ற காதுகளும் கொண்டு அருளே வடிவாக காட்சி தருபவர். வேண்டுவோருக்கு வேண்டுவன அருளக்கூடிய மிகவும் எளிமையான இந்து கடவுள் ஆவார்.
வேதங்கள் போற்றும் வேழமுகத்தோன். அனைவருக்கும் அருள்பாலிக்கும் ஆனைமுகத்தோன். இவரை எளிமையாக வழிபட்டாலே நமக்கு அருளை வாரி வணங்குவார். அதனால்தான் அருகம்புல்லையும், மூஞ்சூரையும் தனக்கு பிடித்தமானவையாக வைத்திருக்கிறார்.
விநாயகரே முழு முதற்கடவுள். எந்த ஒரு செயலைச் செய்யத் தொடங்கினாலும் விநாயகரை நினைந்து துதித்து அச்செயலை ஆரம்பித்தால் சுபமாக முடியும் என்பது இந்துக்களின் நம்பிக்கை.
பாரத தேசத்தின் இதிகாச காவியமான மஹாபாரதத்தை தனது தந்தத்தை எடுத்து எழுதியதன் வாயிலாக விநாயகப்பெருமானே எழுத்துக்கலைக்கு வித்திட்டவர் ஆகிறார். ஆகையினாலேயே எழுதத் தொடங்கும் முன் பிள்ளையாரை ஞாபகப்படுத்தும் “உ” எனும் பிள்ளையார் சுழி போட்டுத் தொடங்கும் அனைத்து செயல்களையும் பிள்ளையார் அருளால் பிசிறின்றி முடித்துவிடும் என்பது ஆன்றோர் வாக்கு. அப்படிப்பட்ட விநாயகர் திருவுருவம்
இந்தோனேசியா பணத்தாளில் விநாயகர் உருவம் இடம் பெற்றுள்ளது.
இந்தோனேசியா பணத்தாளில் விநாயகர் உருவம் குறித்து திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்க நிறுவனரும் தலைவருமான யோகாசிரியர் விஜயகுமார் பேசுகையில், இந்தோனேசிய குடியரசு என அழைக்கப்படுவது பல தீவுகளால் ஆன தென் கிழக்கு ஆசிய நாடாகும். மக்களால் தெரிவு செய்யப்பட்ட சட்டசபையையும், ஜனாதிபதியையும் கொண்ட குடியரசு நாடாகும். சக்கார்த்த இந் நாட்டின் தலைநகரம் ஆகும் இந்நாட்டு பாலித்தீவில் இந்து மக்கள் அதிகம் வாழ்கின்றனர் அவர்கள் செல்வத்தின் அதிபதியாக விநாயகரை கருதுகிறார்கள்.
இந்தோனேசியாவின் கரென்சியை ரூபியா (rupiah) என்று அழைப்பார்கள். இந்தோனேசியாவில் உள்ள 20,000 ரூபியா பணத்தாளில் இந்துக்கள் வணங்கும் விநாயகர் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது.
இந்தோனேசியாவில் உள்ள மொத்த மக்கள் தொகையில் அதிகப்படியானோர் முஸ்லீம் மதத்தைப் பின்பற்றுபவர்கள் உள்ளார்கள்.
மொத்த மக்கள் தொகையில் சுமார் 87.5 சதவீதம் பேர் முஸ்லீம் மதத்தைச் சேர்ந்தவர்கள். அதேபோல் இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் 3 சதவீதத்தனர் இந்தோனேசியாவில் உள்ளனர்.
பண்டைய காலத்தில் இந்து மதத்தினர் இந்தோனேசியாவில் இருந்துள்ளனர். அதிக அளவிலான மக்கள் இந்து மதத்தைப் பின்பற்றியதுடன் இன்றும் பல இடங்களில், பல இந்து மத சிற்பங்கள் மற்றும் ஓவியங்கள் இந்தோனேசியா முழுவதும் நிலைத்திருக்கிறது.
இந்தோனேசியா ரூபியா 20,000 பணத்தாள்களில் இடம்புரி விநாயகர் அமர்ந்த நிலையில் உள்ள படம் 1998 ஆம் ஆண்டு அச்சிடப்பட்டுள்ளது. அந்நாட்டின் சுதந்திர போராட்ட வீரரும் கல்விக்கு வித்திட்ட தியாகச் செம்மல் கிஹாஜர் தேவேந்திரா படமும் இடம்பெற்றுள்ளது.
இது இந்தியாவிற்கும் இந்தோனேசியாவிற்கும் உள்ள பண்பாடு, கலாச்சாரத்தை எடுத்துரைப்பதாக பார்க்கப்படுகிறது என்றார்.