ஒரு இளவரசனை அவன் குழந்தையாய் இருக்கும் பொழுது சிலர் கடத்திச் சென்றார்கள். அவனை காட்டிற்கு கொண்டு சென்று யாரும் இல்லாத ஒரு இடத்தில் தனியாக விட்டுச் சென்று விட்டார்கள். உண்ண உணவின்றி பட்டினியில் அவன் இறந்து போய்விடுவான் என்று அவர்கள் நினைத்துக் கொண்டிருந்தார்கள். அவனுடைய அதிர்ஷ்டம் சில காட்டுவாசிகள் அவனை எடுத்து வளர்த்து வந்தார்கள். அவர்களிடம் வளர்ந்த காரணத்தால் அக்குழந்தை அவர்களின் பழக்க வழக்கங்களை கற்றுக் கொண்டு ஒரு காட்டுவாசி போலவே நடந்து கொண்டது.
வருடங்கள் பல சென்றன திடீர் என்று அந்நாட்டு அரசன் இறந்து விட்டார். அதனால் இளவரசனை தேடும் முயற்சி தீவிரம் ஆக்கப்பட்டது. சிறுவயதில் அவனை பார்த்த ஞாபகம் வைத்துக் கொண்டு சிலர் தற்செயலாக காட்டில் இளவரசனை பார்க்க நேர்ந்தது. அவனை அடையாளம் கண்டுகொண்டார்கள். நீ ஒரு அரச குலத்தில் பிறந்தவன் ஊர் மக்களை ஆளும் உரிமை உண்டு. உனது தந்தை இறந்துவிட்டதால் நீ அரசாட்சியை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அவனிடம் தெரிவித்தார்கள். முதலில் அவன் அவர்கள் சொன்னதை நம்பவில்லை. பிறகு படிப்படியாக அவர்களுடைய வார்த்தைகளில் அவனுக்கு நம்பிக்கை ஏற்பட்டது. காட்டை விட்டு திரும்பிய அவன் வெகு விரைவிலேயே தன் நடவடிக்கைகளை எல்லாம் மாற்றிக்கொண்டு ஓர் அரசனுக்குரிய அனைத்து தகுதிகளையும் பெற்றுத் திகழ்ந்தான்.
உண்மையில் நாம் எல்லோருமே எவ்விதப் பந்தமும் அற்ற பரம் பொருளே ஆகும். அறியாமையின் காரணமாக பிறப்பும் இறப்பும் நமக்கு ஏற்படுவதாக நினைத்துக் கொண்டு நாம் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறோம். குருவின் மூலம் நாம் நம் சொரூபத்தை அறிந்து கொண்டால் பந்தம் எனும் கற்பனையான கை விலங்குகளை நாம் முறித்துக்கொண்டு ஆனந்தமயமான பொருளில் நிலைத்து விடுவோம். வாஸ்தவத்தில் எந்தவித மாற்றமும் ஒருவனுடைய உண்டாவதில்லை. இளவரசனின் விஷயத்தில் ஏற்பட்டது போலவே இங்கும் தவறான நம்பிக்கைகள் மட்டுமே ஒருவனிடம் இருந்து அகற்றப்படுகின்றன.