மிக விநோத நிகழ்வாக, உத்தரப்பிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டத்தில், ஒரு சிறுவனை, ஒரே பாம்பு ஒரு மாதத்தில் எட்டு முறை கடித்திருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதிர்ஷ்டவசமாக, சிறுவன் எட்டு முறை பாம்புக் கடியில் சிக்கியும் உயிர் பிழைத்துள்ளான்.
ராம்புர் கிராமத்தைச் சேர்ந்த யாஷ்ராஜ் மிஷ்ரா (17) பாம்பு கடித்து பல முறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். கடந்த வாரமும் பாம்பு கடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளான்.
இது குறித்து சிறுவனின் தந்தை சந்திரமௌலி மிஷ்ரா கூறுகையில், மூன்றாவது முறை ஒரே பாம்பால் எனது மகன் கடிபட்டதை அடுத்து, அவனை பஹதுர்புர் கிராமத்தில் உள்ள எனது உறவினர் வீட்டில் கொண்டு போய் விட்டுவிட்டேன்.
ஆனால் அங்குச் சென்ற ஒரு சில நாள்களிலேயே அந்தப் பாம்பை பார்த்ததாக எனது மகன் கூறினான். அடுத்த நாளே அவனை அந்த பாம்பு கடித்துவிட்டது. உடனடியாக அவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தான்.
இது குறித்து அவரது குடும்பத்தினர் கூறுகையில், சிறுவனை பாம்பு கடித்ததும் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிப்போம். அதோடு பாம்பு பிடிப்பவர்கள் கூறும் வைத்தியங்களையும் பார்ப்போம்.
ஆனால், ஒரு பாம்பு ஏன் எங்களது மகனை குறிவைத்துக் கடிக்கிறது என்பதை எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. எங்களது மகன் பாம்புக் கடியால் மன வேதனை அடைந்து, எப்போதும் பாம்பை நினைத்து அச்சத்திலேயே வாழ்ந்து வருகிறான்.
பல முறை பாம்புக் கடியில் இருந்து தப்பிக்க பூஜைகளும் செய்துவிட்டோம், பாம்பாட்டியை வரவழைத்து பாம்பை பிடித்துச் செல்லவும் முயற்சித்தோம். ஆனால் எதுவும் பலனளிக்கவில்லை என்கிறார் சந்திரமௌலி.