கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் குடியிருப்புகளில் பாம்புகள் நுழைவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
பொள்ளாச்சி அருகேயுள்ள மாக்கினாம்பட்டி ஊராட்சியில் பாஸ்கர் நகர், கோபால் நகர்,ஈ.பி.நகர் உள்ளிட்ட தெருக்களில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.
பாஸ்கர் நகர் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான காலிமனைகள் அதிகம் உள்ளன. இவை பல ஆண்டுகளாக பராமரிக்கப்படாமல், புதர்மண்டிக் காணப்படுகின்றன. இந்த புதர்களில் ஏராளமான பாம்புகள் உள்ளன.
கடந்த சில நாட்களாக பாஸ்கர் நகர் பகுதியில் இரவு நேரங்களில் குடியிருப்புகளில் பாம்புகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. பாம்புகளைப் பிடிப்பதற்காக பொதுமக்கள் தீயணைப்புத் துறையின் உதவியை நாடுகின்றனர்.
இதுகுறித்து வனத் துறையினர் கூறும்போது, “பொதுவாக செப்டம்பர் மாதம் பாம்புகளின் இனப்பெருக்க காலம் என்பதால், பாதுகாப்பான இடங்களில் அவை முட்டையிட்டு, குஞ்சு பொரிக்கின்றன. ஒரே நேரத்தில் 30 பாம்புக் குட்டிகள் வரை முட்டைகளில் இருந்து வெளிவரும். கடந்த சில வாரங்களாக, பாம்புகளைப் பிடிக்கக்கோரி பொதுமக்களிடமிருந்து வனம் மற்றும் தீயணைப்புத்துறைக்கு அதிக அழைப்புகள் வருகின்றன.
பொதுவாக, காலி வீட்டுமனைகள், வீட்டின் சுற்றுப்புறம், வீட்டின் பின்புறம் உள்ள காலியிடங்களை முறையாகப் பராமரிப்பதில்லை. இதனால், புற்கள் வளர்ந்து, புதர்கள் மண்டிக் காணப்படுகின்றன. சில இடங்களில் குப்பை, பழைய சாமான்களை வீட்டுக்கு அருகிலேயே குவித்து வைத்துள்ளனர். இதனால், பாம்புகள் எண்ணிக்கை பெருகி, குடியிருப்புகளில் நுழைகின்றன. வீட்டின் உட்புறம் மட்டுமின்றி, சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்திருப்பதே இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு” என்றனர்.