சாலைவிபத்துகளில் 2019ம் ஆண்டு உயிரிழந்தவர்கள் சுமார் 59,000 பேர் இரு சக்கர வாகனத்தில் சென்றவர்கள் என்று தேசிய குற்ற ஆவண காப்பகம் தெரிவித்துள்ளது. மேலும் பல லட்சக்கணக்கான நபர்கள் படுகாயமடைந்து உள்ளார்கள். கட்டுப்பாடற்ற முறையில், போக்குவரத்து விதிகளை மதிக்காமல் முறையற்று அலட்சியமாக வாகனங்களை செலுத்துவது மக்களின் தவறே.
குறிப்பாக இரு சக்கர வாகன ஓட்டிகள் ஒரு வழிப்பாதையில் எதிர்திசையில் செல்வது அதிகரித்துள்ளது. இது குறித்து கேள்வி எழுப்பினால் தரக்குறைவாக பேசுவதோடு, அதன் விளைவாக மோதல்கள் ஏற்படும் அளவிற்கு நிலைமை விபரீதமாகிறது.
மூன்று பேர் அமர்ந்து செல்வது, தலைக்கவசம் இல்லாமல் செல்வது, காப்பீடு செய்யாமல் இருப்பது, ஓட்டுநர் உரிமங்கள் இல்லாதது, மிக வேகமாக வாகனங்களை செலுத்துவது, அதிக சுமைகளை ஏற்றி செல்வது போன்ற பல்வேறு முறையற்ற செயல்களை மக்கள் அரங்கேற்றுவது கொடூரம்.
காவல் துறை எவ்வளவோ முயற்சி செய்தாலும் அவர்களையும் தாக்குவது, ஏளனம் செய்வது, வசைபாடுவது போன்ற பல கொடுஞ்செயல்கள் அரங்கேறி வருகின்றன. பார்ப்பதற்கு சிறிய விதிமீறல்களாக தோன்றினாலும் பல ஆயிரக்கணக்கான மரணங்களுக்கு காரணமாகின்றன என்பதை மக்கள் உணரவேண்டும். தேசிய நெடுஞ்சாலைகளிலும் இவை தொடர்கதையாக உள்ளது.
ஒருவழிப்பாதையில் எதிர்திசையில் வருவோருக்கு அதிக அளவு அபராதம் விதிப்பதன் மூலமே இந்த குற்றங்களை கட்டுப்படுத்த முடியும். மேலும், விதிமீறல்களை செய்து விட்டு காவல்துறையினரிடமும், சட்டத்தை மதித்து வாகனங்களை செலுத்துவோரிடமும் தகராறு செய்வோரை, தரம் தாழ்ந்த வார்த்தைகளால் வசைபாடும் நபர்கள் மீது குற்றவியல் சட்டத்தில் கைது செய்து நடவடிக்கை எடுப்பதன் மூலமே இந்த குற்றங்களை நிறுத்த முடியும். இரு சக்கர வாகனங்கள், ஆட்டோ ஓட்டுநர்களே பெரும்பாலான விதிமீறல்களை, குற்றங்களை செய்து வருகின்றனர்.
நியாயமாக, கண்டிப்பாக காவல்துறையின் நடந்து கொண்டு நடவடிக்கை எடுக்கும் போது, அவர்களின் செயல்களை காட்டுமிராண்டித்தனம் என்றும் அராஜகம் என்றும் அரசியல்வாதிகளும், ஊடகங்களும் சித்தரிப்பதை நிறுத்த வேண்டும். குறிப்பாக ஊடகங்கள் பரபரப்புக்காக காவல்துறையினரின் செயல்பாடுகளை ஊதி பெரிதாக்கி, தங்களின் வியாபாரத்திற்காக மக்களின் உணர்வுகளை தூண்டி விட்டு வேடிக்கை பார்ப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
ஓட்டுநர் உரிமம் இல்லாமல், காப்பீடு இல்லாமல், தலைக்கவசம் இல்லாமல், சட்ட விதிகளை மதிக்காமல் வாகனங்களை செலுத்தினால் காவல் துறையினர் கேட்க கேட்கத்தான் செய்வார்கள். சட்ட விதிமீறல்களுக்கு உண்டான அபராதத்தை முறையாக செலுத்தி விட்டால், அவர்கள் லஞ்சம் பெற வேண்டிய அவசியமில்லை என்றே கருதுகிறேன்.
அதையும் மீறி, லஞ்சம் பெறும் காவல்துறையினரை ஊடகங்கள் அடையாளம் காட்டுவது தவறில்லை. ஆனால், சட்டவிதிகளை மீறி வாகனங்களை செலுத்தி விட்டு, காவல்துறையினரை அத்துமீறி எதிர்க்கும் நபர்களை அப்பாவிகளாக சித்தரிக்கும் பழக்கத்தை ஊடகங்கள் நிறுத்தி கொள்வது நல்லது. பல காவல்துறையினர் ஊடகங்கள் மற்றும் அரசியல்வாதி களுக்கு பயந்து மற்றும் பணிந்தே விதிமீறல்களை கண்டுகொள்வதில்லை. இது நல்லதல்ல.
காவல்துறையினர் லஞ்சம் பெறுவதாக சொல்லி இந்த விதிமீறல்களுக்கு காரணமாக சொல்வதை ஏற்று கொள்ள முடியாது. பெரும்பான்மையான விதிமீறல்களுக்கு மக்களே காரணம்.
சட்டத்தை அமல்படுத்த வேண்டிய காவல்துறையினரின் கைகளை கட்டிப்போட்டு வைத்திருப்பது அரசியல்வாதிகள் மற்றும் ஊடகங்கள். சமீபத்தில் மோட்டார் வாகன சட்ட திருத்தத்தில் பல்வேறு மாற்றங்களை, சீர்திருத்தங்களை மத்திய பாஜக அரசு கொண்டு வந்தும், அதை கடுமையாக எதிர்த்தன அரசியல் கட்சிகளும், சில ஊடகங்களும். அவர்கள் எதிர்த்தது அரசை அல்ல. விபத்துகளை, மரணங்களை கட்டுப்படுத்த பாஜக அரசு எடுத்த முயற்சிகளை தான் அவர்கள் எதிர்க்கின்றனர் என்பதே உண்மை.
சட்டங்கள் மக்களுக்காகத்தான். ஆனால், சிலர் அதை மீறும் போது, காவல்துறையினர் உறுதியாக, நேர்மையாக எடுக்கும் நடவடிக்கைகளுக்கு நாம் துணை நிற்க வேண்டியது அவசியம் மட்டுமல்ல தற்போதைய அவசரமும் கூட.
மக்களும், ஊடகங்களும், அரசியல்வாதிகளும் உணர்வார்களா? காலம் பதில் சொல்லும் காத்திருப்போம்.
- நாராயணன் திருப்பதி. (செய்தி தொடர்பாளர், பாஜக.,)