மதுரை அருகே 70 வயது மூதாட்டி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.
நாளுக்கு நாள் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தொல்லை அதிகரித்து வரும் நிலையில் தற்போது மூதாட்டி ஒருவருக்கு இளைஞர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் ஒத்தக்கடை அருகே உள்ளது திருகானை கிராமம். இந்த கிராமத்தில் 70 வயது மூதாட்டி ஒருவர் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். மூதாட்டி வீட்டில் தனியாக இருப்பதை அதே பகுதியைச் சேர்ந்த 37 வயதான கார்த்திக் பாண்டி என்ற இளைஞர் நோட்டமிட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் சம்பவத்தன்று இரவு மூதாட்டி வீட்டில் தனியாக இருப்பதை அறிந்து கொண்ட கார்த்தி பாண்டி, மூதாட்டியின் வீட்டிற்குள் அத்துமீறி உள்ளே நுழைந்து மூதாட்டியிடம் தவறான வார்த்தைகளை பேசியுள்ளார்.
இளைஞரின் பேச்சுவார்த்தையில் சந்தேகம் ஏற்பட்ட மூதாட்டி அவரை அங்கிருந்து வெளியேறுமாறு கூறியுள்ளார்.
அங்கிருந்து வெளியேற மறுத்த கார்த்தி பாண்டி வலுக்கட்டாயமாக மூதாட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இளைஞரின் இந்த திடீர் செயலை சமாளிக்க முடியாமல் திணறிய மூதாட்டி நடந்த சம்பவம் குறித்து மறுநாள் காலை அக்கம்பக்கத்தினரிடம் தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. மூதாட்டி கொடுத்த புகாரையடுத்து போலீசார் அந்த இளைஞரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தற்போது அவரை சிறையில் அடைத்துள்ளனர்.
இளைஞர் ஒருவர் 70 வயது மூதாட்டி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.