திருச்சி மாவட்டத்தில் உள்ள காந்தி பஜார் பகுதியில், ஓய்வு பெற்ற பேராசிரியர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னதாக இவரின் வீட்டில் திடீரென நுழைந்த மர்ம நபர், வீட்டில் இருந்த பேராசிரியரின் தாயை தாக்கி, கத்தியால் குத்திவிட்டு நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துள்ளான்.
கத்திக்குத்து வாங்கிய பேராசிரியரின் தாய் உயிருக்கு போராடிய நிலையில், அங்கு வீட்டு வேலை செய்து வந்த 30 வயது மதிக்கத்தக்க பெண்ணை ஆபாசமாக வீடியோ எடுத்து பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளான்.
இதன்போது பெண் கூச்சலிடவே, அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்துள்ளனர்.
இதனையடுத்து சுதாரித்த காமுகன் தப்பி சென்றுவிடவே, இந்த விஷயம் தொடர்பாக காந்தி மார்க்கெட் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், 23 வயதான டேவிட் என்பவனை கைது செய்துள்ளனர்.
விசாரணையில், கடந்த சில வருடங்களாகவே போதைக்கு அடிமையான டேவிட் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததும், டேவிட்டின் மீது கொலை முயற்சி மற்றும் கொள்ளை, பாலியல் தொல்லை தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்த அழைத்து செல்கையில், நீதிபதி டேவிட்டிடம் விசாரணை செய்துள்ளார். நீதிபதியை தகாத வார்த்தைகளால் திட்ட தொடங்கிய கொடூரன், “நான் செய்தது தப்புதான். ஆனால், உன்னால் என்ன செய்துவிட முடியும்?” என்று கடுமையாக பேசியுள்ளான். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.