ஏதோ வேலு கொடுக்குறாங்க… அத வாங்கி கையில தான வெச்சிக்கிட்டோம்… நாக்குலயா குத்திக்கிட்டோம் என்று நக்கலாகப் பேசியுள்ளார் திமுக.,வின் 2ஜி ஊழல் உலகப் புகழ் ஆ.ராசா. அவருக்கு இணையவாசிகள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
சென்னை புளியந்தோப்பில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய திமுக துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா, “ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பதே எங்கள் கொள்கை. யார் மனதையும் புண்படுத்த மாட்டோம். ‘கடவுள் இல்லை, கடவுள் இல்லவே இல்லை, கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்’ என்று சொன்ன பெரியாருக்கே குன்றக்குடி அடிகளார் திருநீறு கொடுத்தார். குன்றக்குடி அடிகளாரின் மனதைப் புண்படுத்தக் கூடாது; அவரது உணர்வை மதிக்க வேண்டும் என்பதற்காக பெரியாரே திருநீறை எடுத்துப் பூசிக் கொண்டார்.
அதேபோலத்தான் வேல் கொடுத்தால் நாங்கள் வாங்கிக் கொள்வோம். நாகரிகம் கருதி, கொடுப்பவர்களின் உணர்வை மதிப்பதற்காகவே வேலினை வாங்கிக் கொள்கிறோம். நாங்கள் என்ன வேலை வாங்கி நாக்கிலா குத்திக் கொண்டோம். அப்படி ஒன்றும் நாங்கள் செய்யவில்லையே?
கடவுள் இல்லை என்பது பெரியாரின் கொள்கை. எங்களை மீறி ஒரு சக்தி இருக்கிறது. அதை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். அவ்வளவுதான்” என்று பேசினார் ஆண்டிமுத்து ராசா.
அவரது பேச்சுக்கு டிவிட்டர் பதிவுகளில் பலரும் பதிலடி கொடுத்து வருகின்றனர். சக்திதான் வேலாய் வடிவெடுத்தாள். சக்திவேல் என்று அழைக்கப்படுகிறது வேலவன் கைவேல். நாளை வேலினை நாக்கில் குத்தினால்தான் பதவி கிடைக்கும் என்று ஒரு சூழல் வந்தால் அப்படியே செய்து அது ஒரு அக்குபங்க்சர் ட்ரீட்மெண்ட் என்று சொல்வார் ஆ.ராசா… என்று டிவிட்டர்வாசிகள் பதிலடி கொடுத்து வருகிறார்கள்…