மோகந்தால் பர்ஃபி
தேவையான பொருட்கள்
கடலை மாவு – 2 கப்
வெண்ணெய் (அ) நெய் – 6 மேசைக்கரண்டி
சீனி – ஒன்றேகால் கப்
தண்ணீர் – அரை கப்
க்ரீம் – அரை கப்
மில்க் பவுடர் – ஒரு கப்
வெதுவெதுப்பான பால் – ஒரு மேசைக்கரண்டி
ஏலக்காய் பொடி – ஒரு தேக்கரண்டி
பாதாம் (நறுக்கியது) – சிறிதளவு
செய்முறை
தேவையான பொருட்களைத் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் கடலை மாவைக் கொட்டி, அதில் உருகிய நிலையில் இருக்கும் வெண்ணெயைச் சேர்த்து நன்கு கலந்து விட்டு, இரு உள்ளங்கைகளாலும் நன்கு தேய்த்துவிடவும். (இவ்வாறு செய்வதால் மாவு உதிரியாகும்). இப்போது அதை 15 நிமிடங்கள் அப்படியே வைத்துவிடவும். பிறகு அத்துடன் பாலையும் சேர்த்து, அதே போல் கைகளால் நன்கு தேய்த்து மாவை உதிரியாக்கி வைத்துக் கொள்ளவும்.
ஒரு நாண் ஸ்டிக் பானில் க்ரீமையும், மில்க் பவுடரையும் சேர்த்து அடுப்பில் வைத்து மிதமான தீயிலேயே கிளறவும்.
நன்கு சுருண்டு மிருதுவான கோவாவாக வந்ததும், அடுப்பிலிருந்து இறக்கி ஆறவிடவும்.
ஆறிய பிறகு அத்துடன் உதிர்த்து வைத்திருக்கும் மாவைச் சேர்த்து மிதமான தீயிலேயே வைத்து மரக்கரண்டியால் நன்கு உதிர்த்து விட்டு, மசித்து விட்டு கைவிடாமல் ஒன்று சேரக் கிளறிக் கொண்டே இருக்கவும்.
மரக்கரண்டியால் உதிர்த்தும், மசித்தும் கிளறுவதால் ப்ரெட் க்ரம்ஸ் போல் உதிரி உதிரியாக வரும். அப்படியே கிளறக் கிளற நல்ல வாசனையும் வருவதோடு பொன்னிறமாகவும் மாறும். அப்போது ஏலக்காய் பொடியைச் சேர்த்து கிளறி அடுப்பிலிருந்து இறக்கிவிடவும். மற்றொரு பாத்திரத்தில் சீனியுடன் தண்ணீரைச் சேர்த்து அடுப்பில் வைத்து மிதமான தீயில் சீனியைக் கரையவிடவும். சீனி கரைந்து நன்கு கொதித்த பிறகு இரண்டு நிமிடங்கள் கழித்து ஒரு கப் தண்ணீரில் ஒரு துளி சீனிப் பாகை ஊற்றினால் கரையாமல் நிற்கும் (இரு கம்பி பதம்).
பாகு கம்பி பதம் வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி உதிரியான மாவில் ஊற்றி வேகமாக நன்கு ஒன்று சேரக் கிளறி விட்டு நெய் தடவிய தட்டில் பரவலாக கொட்டி சமப்படுத்தவும். மேலே நறுக்கிய பாதாமைத் தூவி விட்டு சூடாக இருக்கும் போதே துண்டுகள் போடவும்.
ஆறியதும் எடுத்து டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ளலாம். ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும். அதிக சுவையுடன் கூடிய மோகந்தால் பர்ஃபி (பேஸன் பர்ஃபி) தயார்.