- ஸ்ரீஜெகந்நாத பண்டிதராயர் இயற்றிய ‘சுதாலஹரி’ நூலில் காணப்படும் சூரிய ஸ்துதி!
தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முக சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்
ஸ்லோகம்:
சுத்தம் ப்ரஹ்மாலவாலம் ப்ரக்ருதி ஸபலிதம் யஸ்யமூலம் கராஸ்தே
த்ராகிஷ்ட ஸ்வர்ணசோபா விகசதருணிமா பல்லவானாம் விலாஸ: |
நீலம் வ்யோமாலிவாலா ஸுரஸபலபரோ தர்மகாமார்த மோக்ஷா
ஸ ஶ்ரீமான் வாஞ்சிதார்தம் விதரது சததம் சூர்யகல்பத்ரு மோவ: ||
பொருள்:
ஸ்ரீசூரிய பகவான் ஒரு கற்பக விருட்சம். அந்த விருட்சத்திற்கு நிர்குண பரப்பிரம்மமே பாத்தி. சகுண பிரம்மம் (த்ரிகுணங்களோடு கூடிய மாயை) வேர். பிரகாசமான கிரணங்களே வெகுதூரம் வியாபித்த கிளைகள். மலரும் சிவந்த நிறமே இளம் தளிர்களின் அழகு. ஆகாயத்தில் உள்ள கருமையே வண்டுகளின் கூட்டம். தர்மம் அர்த்தம் காமம் மோட்சம் என்ற புருஷார்த்தங்களே சாறு நிறைந்த பழங்கள். அப்படிப்பட்ட சூரிய கல்பதரு உங்கள் விருப்பங்களை நிறைவேற்றட்டும்!
ஸ்லோகம்:
ஊர்த்வம் பாபாவலிப்யஸ்தித இதி ஜகதேயஸ்ஸவேதைருதாக்யா
நின்யு: கப்யாஸநாபம் கலு ஸஹசரதாம் நேத்ரயோ: புண்டரீகம் |
கேஷ்டாவ்ருக்ஸாம யஸ்யத்ருத கனகநிப ஸ்மஸ்ருகேசாபிலாங்க:
ஸாயம் சர்வாந்தராத்மா தவ திசதுதராம் வாஸரேஸ: சிவானி ||
பொருள்:
பாவ கூட்டங்கள் ஒட்டாமல் (எந்த தோஷமும் ஒட்டாமல்) அவற்றுக்கு அதீதமாக உள்ள காரணத்தால் ஆதித்யனை ‘உத்’ என்ற சொல்லால் வேதங்கள் குறிப்பிடுகின்றன. சூரியனுடைய கண்கள் சிவந்த ஒளியோடு தாமரைக்கு சமமாக இருப்பதாக (புண்டரீகாக்ஷன் என்று) உபநிஷத்து வர்ணிக்கிறது. ருக்வேத, சாமவேத மந்திரங்கள் அவனைத் துதித்து அந்த தத்துவத்தையே எடுத்து விளக்குகின்றன. சூரிய பகவானின் மீசை, தாடி, முடி, இதர அங்கங்கள் அனைத்தும் தங்க நிறத்தோடு பிரகாசிக்கின்றன. அனைவருக்கும் அந்தராத்மாவாக விளங்கும் சூரிய ‘தினாதிபதி’ உமக்கு சர்வ சுபங்களையும் நிறைவாக அருளட்டும்!
(Source: ருஷிபீடம் தெலுகு மாத இதழ், பிப்ரவரி 2016)