பேருந்திற்காக காத்திருந்தவர்கள் மீது வேன் மோதிய விபத்தில், அக்கா – தம்பி இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்
விருதுநகர் மாவட்டத்திலுள்ள சாத்தூர் சின்னத்தம்பியாபுரத்தை சேர்ந்தவர் பாண்டி. இவரது அக்கா செல்வி. இவர்கள் இருவர் மற்றும் குடும்பத்தினர் உட்பட 7 பேர் குலதெய்வ கோவிலுக்குச் செல்ல முடிவெடுத்துள்ளனர்.
இதனையடுத்து, அங்குள்ள பெத்துரெட்டிபட்டி பேருந்து நிறுத்தத்தில், பேருந்துக்காக காத்துகொண்டு நின்றுள்ளனர். இதன் போது அவ்வழியாக வந்த வேன் ஒன்று, திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்றிருந்தவர்கள் மீது மோதியுள்ளது.
இந்த விபத்தில் பாண்டி மற்றும் செல்வி பலத்த காயமடைந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்தை ஏற்படுத்திய வேன் சாலையோரம் உள்ள பள்ளத்தில் சென்று நின்றது. வேனில் பயணம் செய்த 5 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர், விரைந்து வந்து காயமடைந்தோரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், விபத்தில் உயிரிழந்த அக்கா – தம்பியான செல்வி மற்றும் பாண்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.