பலமுறை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதில் கர்ப்பமான சிறுமி கொடுத்த புகாரின் பேரில் உறவினர் உள்ளிட்ட 3பேரை மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீசார் கைது செய்து போக்சோ சட்டத்தின் கீழ் சிறையிலடைத்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட கிராமத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமியை, அவரின் உறவினரான தினேஷ்குமார் (19) என்பவர் திருமணம் செய்து கொள்வதாகக்கூறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
தொடர்ந்து சிறுமியை திருமணம் செய்து கொள்ளாமல் இழுத்தடித்தடித்தகவும் கூறப்படுகிறது. இதனால் சிறுமி அங்கிருந்து புறப்பட்டு மயிலாடுதுறை சித்தர்காட்டில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கியுள்ளார்.
அங்கு, மயிலாடுதுறை மாப்படுகை, கங்கைநகரைச் சேர்ந்த முருகவேல் என்பவர் சிறுமிக்கு பலமுறை பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
அதன்பின், மங்கைநல்லூரில் சிறுமிக்கு அண்ணன் முறையாகும் சிங்காரவேலன் என்பவரும் சிறுமிக்கு பலமுறை பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதன்பின், மங்கைநல்லூரில் உள்ள ஒரு ஹோட்டலில் வேலை பார்த்து வந்த சிறுமி, வயிற்றுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனை செய்ததில் சிறுமி 3 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து சிறுமி அளித்த புகாரின் அடிப்படையில் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்த மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீசார், தினேஷ்குமார் (19), முருகவேல் (35), சிங்காரவேலன் (30) ஆகிய மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.