சட்டக் கல்லூரி உதவி பேராசிரியர் மாணவிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்துகொடுத்து பாலியல் பலாத்காரம் செய்த கொடூரம் நடந்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாளையங்கோட்டை அரசு சட்டக் கல்லூரியில் மூன்றாம் வருடம் படித்து வரும் மாணவி ஒருவர், நெல்லை மாநகர காவல் ஆணையரிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார். இது தொடர்பான புகாரில், ” பாளையங்கோட்டை சாந்தி நகர் பகுதியைச் சார்ந்த உதவிப் பேராசிரியர் ராஜேஷ் பாரதி.
இவர் இணையதள வகுப்பு எடுக்கையில், தனது அலைபேசி நம்பரை தெரிந்து கொண்டுள்ளார். இதன் மூலமாக அவர் பேசி பழக தொடங்கிய நிலையில், நானும் ஆசிரியர் என்ற முறையில் பேசி வந்தேன்.
இந்நிலையில், ஊரடங்கின் போது ஊருக்கு செல்ல வேண்டிய சூழல் எனக்கு ஏற்பட்டது.
இதனையடுத்து, நயவஞ்சகமாக தனது காரில் வீட்டிற்கு அழைத்து செல்வதாகக் கூறிய நிலையில், வழியில் குடிக்க குளிர்பானம் கொடுத்தாரீ. அதனைக்குடித்ததும் நான் மயங்கிவிட்டேன். மயக்கத்தில் இருந்து தெளிந்ததும் தான், என்னை நயவஞ்சகமாக ஏமாற்றி அழைத்து வந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் என்பது புரிந்தது.
மேலும், அதனை வீடியோவாக பதிவு செய்து, தனது ஆசைக்கு இணங்க கூறி மிரட்டி வருகிறார். அவனின் மீது சட்டப்படி நடவடிக்கையை எடுத்து, எனது வாழ்க்கையை காப்பாற்றுங்கள் ” என்று தெரிவித்துள்ளார். புகாரின் பேரில் உதவி பேராசிரியர் பாரதி மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.
காவல்துறையினர் தேடுவதை அறிந்ததும் தலைமறைவாகியுள்ள நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னதாக சட்டக் கல்லூரி வாசலில் கையில் கத்தியுடன் உதவிப் பேராசிரியர் ராஜேஷ் பாரதி ரவுடி போல கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய சம்பவமும் நடந்துள்ளது