அடையாறில், தொற்று தடுப்பு பணியில் உள்ள களப்பணியாளர்களை நீக்கிவிட்டு, ‘நாங்கள் கைகாட்டும் நபர்களை நியமிக்க வேண்டும்’ என, தி.மு.க.,வினர் மிரட்டுவதால், அதிகாரிகள் செய்வதறியாது திணறுகின்றனர்.
அடையாறு மண்டலத்தில், தினமும், 600 முதல், 700 பேர் வரை தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். இதில், 175வது வார்டு, அடையாறில், 80 முதல், 100 பேர் வரை பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.
மண்டலத்தில் உள்ள, 13 வார்டில், 175வது வார்டு, அதிக தொற்றில் இரண்டாவது இடத்தில் உள்ளது. சுகாதாரம், பொறியியல், வருவாய்த் துறை இணைந்து, தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த வார்டில், 90 களப்பணியாளர்கள் உள்ளனர்.
இவர்களில் பெரும்பாலானோர், கடந்தாண்டு தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள். அனைவரும், அதிகாரிகள் உத்தரவுக்கு இணங்க, திறன்பட பணி புரிகின்றனர். அதற்கு ஏற்ப, பயிற்சி வழங்கப்பட்டது.
இந்நிலையில், அதே வார்டைச் சேர்ந்த, தி.மு.க., நிர்வாகிகள் சிலர், ‘நாங்கள் அனுப்பும் களப்பணியாளர்களை நியமித்து, அ.தி.மு.க.,வினர் அனுப்பிய, நபர்களை வெளியேற்றுங்கள்’ என, மாநகராட்சி அதிகாரிகளை வலியுறுத்தி உள்ளனர். அதற்கு, ‘கட்சிகள் பரிந்துரையில், களப்பணியாளர்கள் யாரையும் நியமிக்கவில்லை; முறையாக பயிற்சி வழங்கி நியமித்துள்ளோம்.
தொற்று தடுப்பு பணி சிறப்பாக நடக்கிறது. ‘உயிரை பணயம் வைத்து பணி புரிகின்றனர். தற்போதைய சூழலில், யாரையும் நீக்க முடியாது’ என, அதிகாரிகள் கூறி உள்ளனர்.
இதில், ஆத்திரமடைந்த சில நிர்வாகிகள், நேற்று முன்தினம் நடந்த கள ஆய்வு கூட்டத்தில் நுழைந்து, அதிகாரிகளுடன் தகராறு செய்துள்ளனர். ‘இப்போ நடப்பது எங்கள் ஆட்சி; 10 ஆண்டு, அ.தி.மு.க.,வினர் கூறியதை கேட்டீர்கள்; இனிமேல், நாங்கள் கூறுவதை தான் கேட்க வேண்டும். இல்லையென்றால், நடப்பதே வேறு’ என, மிரட்டி உள்ளனர்.
இது குறித்து, யாரிடம் புகார் அளிப்பது என, தெரியாமல், அதிகாரிகள் செய்வதறியாது திணறுகின்றனர்
இது குறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:அனைவரும், உயிரை பணயம் வைத்து, ஓய்வு இல்லாமல் பணி புரிகிறோம். தொற்று குறைந்தால் தான், எங்களுக்கு நிம்மதி. அதற்கு ஏற்ப, களப்பணியாளர்களுக்கு பணி ஒதுக்கி, தடுப்பு நடவடிக்கை நடக்கிறது.
இருக்கும் நபர்களை மாற்றி, தி.மு.க.,வினர் கூறும் நபர்களை நியமித்தால், தடுப்பு நடவடிக்கையில் தொய்வு ஏற்படும். முதல்வர், கொரோனாவை தடுக்க பல்வேறு நடவடிக்கை எடுக்கிறார். அவரது செயலுக்கு, கெட்டப்பெயர் ஏற்படுத்தும் வகையில், தி.மு.க.,வினர் சிலரின் செயல் உள்ளது. அதுபோல் செயல்படுவோரை, கட்சி தலைமை கண்டித்தால் தான், தொற்று தடுப்பு பணியை தொய்வில்லாமல் செய்ய முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.