அரசின் அறிவிப்பை தொடர்ந்து, நேற்று மாலை 4.30 மணிக்கு கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள், பழக்கடைகள், மளிகை பொருட்கள் கடைகள் திறக்கப்பட்டன.
காய்கறிகள், பழங்கள் வாங்க, வியாபாரிகள் கூட்டம் அலைமோதியது. பணி முடிந்து, அங்காடி நிர்வாக குழு ஊழியர்கள் சென்றுவிட்டதால், கூட்டத்தை கட்டுப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டது.
ஒரே நாளில் பணத்தை சம்பாதிக்க முடிவெடுத்த வியாபாரிகள், பொருட்களை கூடுதல் விலையில் விற்பனை செய்தனர். காலையில் 10 முதல் 15 ரூபாய்க்கு விற்கப்பட்ட 1 கிலோ பெரிய வெங்காயம் 30 ரூபாய்க்கும், 10 ரூபாய்க்கு விற்கப்பட்ட தக்காளி 40 ரூபாய்க்கும் விற்கப்பட்டன. கேரட், பீன்ஸ், பீட்ரூட், உருளைக்கிழங்கு உள்ளிட்டவை 50 ரூபாய்க்கு மேல் விற்கப்பட்டன.
இதனால், அங்கு பொருட்களை வாங்க வந்த சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட வியாபாரிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இன்றும் மார்க்கெட் இயங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. பொருட்களை கூடுதல் விலை வைத்து விற்பனை செய்யும் வியாபாரிகளை கண்காணித்து, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.