உத்தரப்பிரதேச மாநிலத்தின் தலைநகர் லக்னோவைச் சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர், தாயாருடன் ஏற்பட்ட சிறிய சண்டையின் காரணமாக கோபித்துக் கொண்டு இனி வேறு எங்காவது சென்று தனியாக வேலை பார்த்து வாழ்ந்து கொள்ளலாம் என்ற எண்ணத்தில் வீட்டை விட்டு வெளியே வந்திருக்கிறார்.
மும்பைக்கு வேலைக்கு செல்லும் திட்டத்தில் வீட்டை விட்டு வெளியே வந்த அச்சிறுமி, மும்பைக்கு எப்படி செல்வது என தெரியாமல் பரிதவித்திருக்கிறார்.
அப்போது சார்பாக் ரயில் நிலையம் சென்று அங்கிருந்து மும்பைக்கு ரயிலில் சென்றுவிடலாம் என்ற எண்ணத்தில் மடியோன் வந்த அச்சிறுமி, ரயில் நிலையத்துக்கு எப்படி செல்வது என அங்கிருந்தவர்களிடம் வழி கேட்டுள்ளார்.
இதனைப் பார்த்த இ-ரிக்ஷா ஓட்டுனரான இக்ரம்தீன் என்பவர் சிறுமியை அணுகி தனியாக இங்கு ஏன் நின்றுகொண்டிருக்கிறீர்கள் என விசாரித்திருக்கிறார்.
அப்போது தான் மும்பைக்கு வேலைக்காக செல்ல திட்டமிட்டிருப்பதையும் வீட்டை விட்டு வெளியே வந்ததையும் அச்சிறுமி இக்ரம்தீனிடம் தெரிவித்துள்ளார்.
பின்னர் இதே ஊரிலேயே உனக்கு வேலை வாங்கித்தருகிறேன் என உறுதியளித்து மடியோன் பகுதியில் உள்ள தன்னுடைய வீட்டுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார் இக்ரம்தீன்.
பின்னர் அன்று மாலை நண்பர்களை தொலைபேசியில் அழைத்து வீட்டுக்கு வரச்சொன்ன இக்ரம்தீன் அந்த 14 வயது சிறுமியை அடித்து துன்புறுத்தி நண்பர்களுடன் சேர்ந்து கூட்டு பாலியல் வன்புணர்வு செய்திருக்கின்றனர்.
இதனையடுத்து மீண்டும் வேறு ஒரு கிராமத்துக்கு அழைத்துச் சென்று அங்கு வைத்தும் சிறுமியை கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கியிருக்கின்றனர்.
இதனிடையே சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் சிறுமியை தேடி கண்டுபிடித்த போலீசார், சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கிய இக்ரம்தீன், அவரின் நண்பர்கள் நசீம், ஷகீல், நூர் முகமது, உத்தம் சர்மா, ரிதேஷ் யாதவ் ஆகிய 6 பேரை கைது செய்த காவல்துறையினர் அனைவர் மீதும் போக்ஸோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட 6 பேரும் 23 முதல் 27 வயதுடையோர் என காவல்துறையினர் தெரிவித்தனர்.