நான் தமிழ்க் கலாசாரத்தின் மிகப் பெரும் ரசிகன்
மனதின் குரல், 78ஆவது பகுதி
ஒலிபரப்பு நாள்: 27.06.2021
ஒலிபரப்பு: அகில இந்திய வானொலி, சென்னை
தமிழாக்கம் / குரல்: ராமஸ்வாமி சுதர்ஸன்
பிரதமர் நரேந்திர மோதி தமது மாதாந்திர வானொலி நிகழ்ச்சியான மனதின் குரல் மூலம் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் இருந்து ஒரு பகுதி…
என் கனிவான நாட்டுமக்களே, என்னை விட உங்கள் அனைவரின் பங்களிப்பும் அதிகமாக இருப்பது தான் மனதின் குரலின் மிகப்பெரிய சிறப்பம்சமே.
தற்போது தான் MyGov தளத்தில் நான் ஒரு பதிவைப் பார்த்தேன். இதை சென்னையைச் சேர்ந்த திரு. ஆர். குருபிரஸாத் அவர்கள் பதிவு செய்திருக்கிறார். அவர் எழுதியிருப்பது உங்களுக்கும் மிகவும் பிடிக்கும். தான் மனதின் குரலைத் தவறாது கேட்டு வருவதாக எழுதியிருக்கிறார். குருபிரஸாத் அவர்களின் பதிவிலிருந்து இப்போது நான் சில வரிகளை மேற்கோள் காட்ட விரும்புகிறேன்.
நீங்கள் தமிழ்நாடு பற்றிப் பேசும் போதெல்லாம், என்னுடைய ஆர்வம் மேலும் அதிகரிக்கிறது. நீங்கள் தமிழ் மொழி பற்றியும், தமிழ் கலாச்சாரத்தின் மகத்துவம் குறித்தும், தமிழ்ப் பண்டிகைகள் மற்றும் தமிழ்நாட்டின் முக்கியமான இடங்கள் பற்றியும் பேசியிருக்கிறீர்கள். மனதின் குரலில் நீங்கள் தமிழ்நாட்டு மக்களின் சாதனைகளைப் பற்றி பல முறை கூறியிருக்கிறீர்கள்.
திருக்குறள் மீது உங்களுக்கு இருக்கும் பிரியமும், திருவள்ளுவர் பால் உங்களிடம் இருக்கும் மரியாதையும் விவரிக்க அப்பாற்பட்டவை. ஆகையால் மனதின் குரலில் நீங்கள் தமிழ்நாடு குறித்து என்னவெல்லாம் கூறியிருக்கிறீர்களோ, இவை அனைத்தையும் ஒன்று திரட்டி நான் மின் புத்தகம் ஒன்றைத் தயார் செய்திருக்கிறேன். நீங்கள் இந்த மின் புத்தகம் குறித்துப் பேசி, இதை NamoAppஇல் வெளியிட முடியுமா? நன்றி.
குருபிரஸாத் அவர்களின் கடிதத்தை நான் உங்களிடத்தில் வாசித்து விட்டேன். குருபிரஸாத் அவர்களே, உங்களுடைய இந்தப் பதிவைப் படிக்க எனக்கு மிகவும் ஆனந்தமாக இருக்கிறது. இப்போது நீங்கள் உங்களின் மின் புத்தகத்தில் மேலும் ஒரு பக்கத்தையும் இணைத்துக் கொள்ளுங்கள்.
நான் தமிழ்க் கலாச்சாரத்தின் பெரிய அபிமானி. நான் உலகத்திலேயே பழமையான தமிழ் மொழியின் பெரிய அபிமானி.
தமிழ் மொழியின் பால் என்னுடைய அன்பு என்றுமே குறைவு காணாது.
நண்பர்களே, ஒவ்வொரு இந்தியரும், உலகின் மிகப் பழமையான மொழி நம் தேசத்தினுடையது, இதனை நாம் போற்றிக் கொண்டாட வேண்டும், பெருமிதம் கொள்ள வேண்டும். தமிழ் மொழி குறித்து எனக்கும் மிகவும் பெருமிதம் பொங்குகிறது.
குரு பிரஸாத் அவர்களே, உங்களுடைய இந்த முயற்சி எனக்குப் புதிய கண்ணோட்டத்தை அளிக்க வல்லது. ஏனென்றால், மிகவும் எளிய இயல்பான வகையிலே தான் நான் மனதின் குரலில் வெளிப்படுத்தி வந்திருக்கிறேன். இதில் இப்படிப்பட்ட ஒரு கூறும் இருக்கிறது என்பதை நான் அறிந்திருக்கவில்லை.
நீங்கள் பழைய விஷயங்கள் அனைத்தையும் திரட்டியிருப்பதை நான் ஒருமுறை அல்ல, இரு முறைகள் படித்துப் பார்த்தேன். குருபிரஸாத் அவர்களே, இந்தப் புத்தகத்தை நான் கண்டிப்பாக Namo செயலியில் தரவேற்றம் செய்வேன். உங்களின் வருங்கால முயற்சிகளுக்காக பலப்பல நல்வாழ்த்துக்கள்.