சேலம் ரயில்நிலையத்தில் எதிர்பாராதவிதமாக ரயில் வண்டிக்கும் நடைபாதைக்கும் இடையே சிக்கிய பீஹார் இளைஞரை பெண் காவலர்கள் துரிதமாக செயல்பட்டு சிறுகாயங்களோடு மீட்டனர்.
சேலம் ரயில்நிலையத்தில் நான்காவது நடைமேடையில் ரயில்வே தலைமைக்காவலர் மஞ்சு மற்றும் அஸ்வினி ஆகியோர் இரவு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அதிகாலை 1:30 மணியளவில் ஜார்கண்ட் மாநிலம் ஹாட்யாவிலிருந்து எர்ணாகுளம் நோக்கி சென்று கொண்டிருந்த ரயில் வண்டி சேலம் ரயில்நிலையத்தில் நிறுத்தி மீண்டும் புறப்படும் போது குதித்த இளைஞர் ரயில்வண்டியில் சிக்கியுள்ளார்.
இதனைக்கண்ட பெண் காவலர்கள் இருவரும் கண்ணிமைக்கும் நேரத்தில் துரிதமாக செயல்பட்டு லேசான காயங்களோடு இளைஞரை மீட்டனர்.
அந்த இளைஞரிடம் மேற்கொண்ட விசாரணையில் இந்த இளைஞர் பீஹார் மாநிலத்தை சேர்ந்த சிவன்குமார் என்பதும் சேலம் ரயில் நிலையத்தில் இறங்க முற்பட்டபோது ரயில் புறப்பட்டுவிட்டதால் ரயிலிலிருந்து குதித்தபோது கீழே விழுந்ததும் தெரியவந்தது.
துரிதமாக செயல்பட்டு இளைஞரை மீட்ட பெண் காவலர்களை உயர் அதிகாரிகள் பாராட்டினர்.