மாண்புமிகு அறநிலையத்துறை அமைச்சர் அவர்களுக்கு பணிவான வணக்கம்…
அருள்தரும் அன்னை காந்திமதிஅம்பாள் உடனுறை அருள்மிகு சுவாமி நெல்லையப்பர் திருக்கோயிலில் உள்ள நவக்கிரக சன்னதியில் உள்ள சந்திரபகவான் திருவுருவச்சிலை இடது கை கடந்த 27.4.2018.நடைபெற்ற கும்பாபிசேகத்திற்காக சுத்தம் செய்யும் போது 25.4.2018 அன்று அதிக அழுத்தமான தண்ணீர் பீச்சி சுத்தம் செய்யும் போது பின்னப்பட்டு விட்டது.
சேதமடைந்த சிலையை வைத்து பூஜை செய்யக்கூடாது உடனே இதை பழுது பார்க்க வேண்டும் என்று இணை ஆணையரிடமும் நிர்வாகஅதிகாரியிடமும் உடனே புகார் கொடுக்கப்பட்டது. ஆனால் நிர்வாகத்தின் சார்பாக இன்று வரைஎவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை. பழுது பார்க்கப்படவில்லை.
கடந்த 28.7.2018.அன்று திருக்கோயில் ஆய்வுக்கு வருகை புரிந்த இந்து அறநிலையத்துறை செயலர் திருமிகு.அபூர்வவர்மா அவர்கள் கவனத்திற்கு பிண்ணப்பட்ட ‘சந்திரன் சிலை’யை நேரில் காண்பித்து விபரம் தெரிவித்தோம். அவரும் பிண்ணப்பட்ட சந்திரன் சிலையை பார்வையிட்டு திருக்கோயில் நிர்வாகம் அழைத்த சிவாச்சாரியாரிடம் விபரம் கேட்டதற்கு அவரும் சந்திரன் சிலை பிண்ணப்பட்டு உள்ளது.அதை மாற்ற வேண்டும் என்று கொடுத்த தகவல் விவரத்தின் அடிப்படையில் *சந்திரன் சிலை* யை மாற்ற உடனடியாக ஏற்பாடு செய்யும் படி இணை ஆணையரிடம் உத்தரவு கொடுத்து அவரும் சரி என்று கூறினார்.
மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களும் உடன் இருந்தார்கள். ஆனால் 7.7.2021.இன்றுவரை எவ்வித நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை. இது குறித்து தந்தி.T.V.யில் நான் கூறிய சில தகவல்கள் ஒலி பரப்பப்பட்டது. அதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் இந்த சந்திரன் சிலை 2004 ம் ஆண்டு கும்பாபிசேகத்திற்கு முன்பே உடைந்து விட்டது என்று 14.8.2018 அன்று கோயில் பணியாளர்கள் கூறுவதாக ஒரு செய்தி மாலைமலர் பத்திரிகையில் வெளிவந்தது. இது சுத்தப் பொய்!
2016ம் வருடம் அருள்மிகு சுவாமி நெல்லையப்பர் திருக்கோயில் இணைய தளத்தில் வெளியிட்டுள்ள இந்த சந்திரன் சிலை படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. திருக்கோயில் கும்பாபிசேகம் முடிந்து மூன்று வருடம் ஆகி விட்டது. உடைக்கப்பட்ட சந்திரன் சிலையும் பழுது பார்க்கப்படவில்லை.
ஆறு மாதத்தில் அனைத்து பணிகளையும் முடிப்போம் என்று 2004 கும்பாபிசேகத்திற்கு முன்பு பழுதுபட்டு தற்போது நிர்வாகத்தால் இடித்து போடப்பட்டுள்ள அம்மன்கோயில் சீவிலி சுற்றும் பிரகாரமும் கட்டி முடிக்கப்படவில்லை.
பதினேழு வருடமாக அம்பாள் கோயிலில் தினமும் காலை, மாலை பலி போட வேண்டிய பிராகாரத்தில் சீவிலி சுற்றவில்லை என்பதும் ஆடிப் பூரத் திருவிழா, ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழா போன்ற விழாவுக்காக அன்னை காந்திமதி அம்பாள் முறையான சுற்று பிராகாரம் வழியாக செல்லாமல் எப்படியோ சுற்றி திருவிழாவையும் முடிக்கிறார்கள் என்பதும் ஊருக்கெல்லாம் தெரியும்
இதற்கு எல்லாம் அறநிலையத்துறை உடனடியாக நடவடிக்கை எடுத்து இந்த பணிகளை உடனடியாக நிறைவேற்றித் தரும்படி பணிவுடன் வேண்டிக் கொள்கிறோம்.
திருவனந்தல் வழிபாட்டுக்குழு.
ஆன்மீகப் பணியில்
சிவ. அ. வெங்கிட சுப்பிரமணியன்,
Ex. சேர்மன். நெல்லை மாநகராட்சி
நம் தினசரி தளத்தில், 05/05/2018 அன்று வெளியான செய்தி
நெல்லை கோயில் கும்பாபிஷேகத்தில் அதிர்ச்சி!: சிதிலமடைந்த சந்திரனுக்கு வழிபாடு! பக்தர்கள் வேதனை!