
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி இப்ராஹிம் நகர் பகுதியில் செல்வராஜ் என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தில் கிருஷ்ணன் என்பவர் வாடகைக்கு எடுத்து குடோன் ஒன்றை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், இந்த குடோனில் சட்டவிரோதமாக தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா போதை பொருட்களை பதுக்கி வைத்து, சுற்றுப்புற பகுதிகளில் உள்ள கடைகளுக்கு சப்ளை செய்து வருவதாக திருப்பத்தூர் எஸ்பி சிபி சக்கரவர்த்திக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து எஸ்பி உத்தரவின்பேரில், வாணியம்பாடி டிஎஸ்பி பழனிசெல்வம் தலைமையில் தனிப்படை போலீசார் நேற்று அந்த குடோனில் திடீர் சோதனை செய்தனர்.
அப்போது அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் ரூ.3 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக பிஸ்மில்லா(37), தாஜுதீன்(38) ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள குடோன் உரிமையாளர் கிருஷ்ணனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த திருப்பத்தூர் எஸ்பி சிபி சக்கரவர்த்தி உடனடியாக குடோனுக்கு சீல் வைக்க வருவாய் துறையினருக்கு பரிந்துரை செய்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.