வாட்ஸ்அப் வீடியோ காலில் ஆபாசமாக தோன்றி பணம் கேட்டு மிரட்டும் வடமாநில கும்பல் குறித்து சென்னை பெருநகர காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்தவர் வினோத். இவரது முகநூல் மெசஞ்சரில் பெண் ஒருவர் ‘ஹாய்’ என மெசேஜ் அனுப்பியுள்ளார்.
பின்னர் அந்த பெண் தனது வாட்ஸ் அப் நம்பரை கொடுத்து உங்கள் வாட்ஸ் நம்பரில் இருந்து வீடியோ கால் வந்தால் என்னை பார்க்கலாம் என்று கூறியுள்ளார்.
வினோத் வீடியோ காலில் அழைக்க வடஇந்திய பெண் ஒருவர் ஆபாசமாக தோன்றியுள்ளார். சிறிது நேரத்தில் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
சில நிமிடங்கள் கடந்த நிலையில், வினோத் பார்த்துக் கொண்டிருந்ததை ஸ்க்ரீன் ஷாட் போட்டோ எடுத்து வினோத்தின் வாட்ஸ் அப்புக்கு வந்தது.
அதனை தொடர்ந்து வினோத்திடம் பேசிய ஆண் ஒருவர் பெண்ணின் ஆபாச படத்தை ரசிக்கும் தங்களின் படத்தை சமூக வலைதளைங்களில் பரப்பி விடுவோம் என்று அச்சுறுத்தி வினோத்திடம் ரூ.50 ஆயிரம் பறித்துள்ளனர்.
மீண்டும் 50 ஆயிரம் ரூபாய் கேட்டு மிரட்டிய நிலையில் சென்னை சைபர் கிரைம் போலீசில் வினோத் புகார் அளித்துள்ளார். விசாரணையில் அது குஜராத்தை சேர்ந்த பெண் என்பதும் அரபித்தா குமாரி, அனாமிகா சர்மா என பல பெயர்களில் இந்த கும்பல் மோசடியை அரங்கேற்றி வருவதும் தெரியவந்துள்ளது.
இந்த கும்பலின் பிடியில் சிக்கியவர்களில் சிலர் வெளியே சொல்கின்றனர், பலர் பணம் போனால் போகட்டும் மானமாவது மிஞ்சியதே என்று பணத்தை கொடுத்துவிட்டு தவித்து வருகின்றனர்.
இந்தியா முழுவதும் இந்த நூதன சைபர் கிரைம் அரங்கேறிவருவதாக கூறப்படுகிறது. பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.