ஆந்திராவில் ஆக்சிஜன் சிலிண்டர்களை ஏற்றிச் சென்ற மினி வேன் வெடித்து சிதறியதால் இரு சக்கர வாகனத்தில் சென்றவர் படுகாயம் அடைந்து ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள அனபர்தியில் இருந்து கடந்த 7 ம் தேதி ஆக்சிஜன் சிலிண்டர்களை ஏற்றுக் கொண்டு மின் வேன் ஒன்று மந்தபாடு அருகே சென்று கொண்டு இருந்தது.
பெட்ரோல் பங்க் அருகே சென்ற போது, வேனுக்குள் இருந்த 9 சிலிண்டர்களும் வெடித்து சிதறி அந்த பகுதியே புகை மண்டலமாக மாறியது.
வேனில் பின்பகுதி முழுவதும் நொறுங்கி சேதம் அடைந்த நிலையில், வேனில் பின்னால் இரு சக்கர வாகனத்தில் சென்றவர் தூக்கி வீசப்பட்டார்.
இந்த கோர விபத்தில் இரு சக்கர வாகனத்தில் வந்தவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ஆபத்தான நிலையில் தற்போது அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில் பெட்ரோல் பங்கில் வைக்கப்பட்டு இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான இந்த விபத்து காட்சிகள் தற்போது வைரலாக பரவி வருகிறது.விபத்திற்கு உள்ளான மினி வேன் ட்ரைவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.