திருப்புகழ்க் கதைகள் 173
கரிய பெரிய எருமை – பழநி – யமதர்மராஜன் 3
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்-
யமனைப் பற்றி சங்கத் தமிழ் இலக்கியங்களிலும் பல குறிப்புகள் வருகின்றன. ஏற்கனவே இந்திரனையும் வருணனையும் தமிழர் தெய்வங்கள் என்று தொல்காப்பியம் கூறியதைக் கொடுத்தேன். இப்போது சங்கத் தமிழ் இலக்கியம் யமதர்மன் பற்றிக் கூறுவதையும் காண்போம். அதில் ஞமன் என்றும் கூறுவர். எடுத்துக்காட்டாக புறநானூற்றில் யமன் பற்றிய சில பாடல் வரிகள் வருமாறு –
உயிர் உண்ணும் கூற்றுப் போன்றன; (புறம் 4, வரி 12)
கூற்று ஒத்தீயே, மாற்று அருஞ் சீற்றம்; (புறம் 56, வரி 11)
புறநானூறு மட்டுமல்லாமல் பதிற்றுப்பத்து, கலித்தொகை ஆகியவற்றிலும் யமதர்மராஜா பவனி வருகிறார். ஞமன் என்ற பெயரும் எருமை வாகனமும் பரிபாடலில் வருகிறது (3, 5, 8 ஆம் பாடல்கள்) மீளி, மறலி, கணிச்சிப்படையோன், மடங்கல், கூற்றம் என்ற பெயரிலும் யமன் பற்றி நிறைய குறிப்புகள் இருக்கின்றன. எனவே யமன் பிராமணர்கள் வனங்கும் ஆரியக் கடவுள் என்ற மாயை பொய்யானது. ஒரு மன்னரின் சீற்றத்தை விவரிக்கும் போது, தமிழ், வடமொழி இலக்கியங்கள் மன்னனை யமனுக்கு ஒப்பிடுவது வழக்கம்.
யமனின் காரியதரிசி சித்திரகுப்தனுக்கும் தமிழகத்தில் கோயில்கள் உள்ளன. சித்திரகுப்தன் என்றால் ‘’ரகசிய வரைபடம்’’ என்று தமிழில் பொருள். நாம் எண்ணும் ஒவ்வொரு எண்ணமும் செயல் வடிவம் பெரும் முன் சித்திரமாகப் படியும். அப்பொழுதே யமன் நமக்கு மதிப்பெண் போட்டு விடுகிறான். அதன் படியே, புண்ணிய பாபங்கள் ஏற்படும். அதன் அடிப்படையில் நாம் நரகத்துக்கோ, சுவர்க்கத்துக்கோ செல்கிறோம். இதையே சித்திர குப்தன் (ரகசிய=குப்த, வரைபடம்=சித்திர) என்போம். ஒரு கம்ப்யூட்டரும் மூளையும் கோடிக் கோடி கணக்குகளைப் போடும். சித்திரகுப்தன் கணக்கு சூப்பர், சூப்பர் கம்ப்யூட்டருக்கும் மேல்.
மஹாபாரதத்தில் விதுரனும் யுதிட்டிரனும் யமனின் அம்சமாகத் தோன்றியவர்கள். இந்த இதிகாசத்தில் ஒரு மிகவும் சுவையான கதை யக்ஷப் ப்ரஸ்னம் என்ற பகுதியாகும். இதில், ‘’உலகிலேயே அதிசயமான விஷயம் என்ன?’’ என்ற யட்சனின் கடைசி கேள்விக்குப் பதில் கொடுத்த தருமன் “உலகில் தினமும் எவ்வளவோ பேர் இறந்து போகிறார்கள். அதைப் பார்த்த பின்னரும் எல்லோரும் தினமும் வாழப் போகிறோம் என்ற எண்ணத்துடன் செயல்படுகிறார்களே, இதுதான் மிகவும் அதிசயமான விஷயமாகும்” என்று தருமர் பதில் கூறுவார். நாம் எல்லோரும் எந்தக் கணத்திலும் இறக்கலாம் என்பதை நினைவு படுத்தவே இப்படி தினசரி யம தர்மன் வழிபாட்டினை பிராமணர்கள் செய்கிறார்கள் போலும்.
திருவள்ளுவரும் மஹாபாரத ஸ்லோகத்தை ஒட்டி
நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்துஇவ் வுலகு
(அதிகாரம்:நிலையாமை குறள் எண்:336)
என்ற குறளில் தந்துள்ளார்.
யமனின் வாகனத்தை கரிய பெரிய எருமை என அருணகிரியார் குறிப்பிடுவார். அதாவது இந்த எருமை பல்லாயிரம் அமாவாசையை வடிகட்டிப் பிழிந்து பூசியது போன்ற நிறமும் ஆலகால விஷத்தைத் திரட்டி நீட்டி வைத்தது போன்ற கொம்பும் பார்த்த மாத்திரத்தில் பச்சை மரமும் தீப் பிடிக்கின்றபடி நெருப்பைப் பொழியும் கொடுமையான கண்களையும் உடையது.
தமர குரங்குகளும் காரிருட் பிழம்பு
மெழுகிய அங்கமும் பார்வையில் கொளுத்தும்தழலுமிழ் கண்களும் காளமொத்த கொம்பும்
உளகதக்கட மாமேல்”
இயமனார் புண்ணியம் செய்பவரிடம் சாந்தம் உடையவராகவும், பாவிகளிடம் கோர வடிவினராகவும் கோபத்துடனும் வருவார். பிராணவாயுவுடன் சேர்த்துப் பாசக் கயிற்றால் கட்டி உயிரை இழுத்து உடம்பினின்று வேறு படுத்துவர். அதனால் கூற்றுவன் எனப்படுவார். எல்லாவற்றையும் அடக்குவதனால் இயமன் என்றும், முடிவைச் செய்வதனால் அந்தகன் என்றும், வேகமுடையவராதலால் சண்டகன் என்றும் பேர் பெறுவர்.