சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 13 ப்ரோ மாடல் மொபைல் போன், ஒரு வினாடியில் ஹேக் செய்யப்பட்டு “சாதனை ” படைக்கப்பட்டுள்ளது
தனியுரிமை உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் பாதுகாப்பு இருக்குமென்று ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களுக்கு ஒரு பெயர் உள்ளது. எனவே தான் பிரபலங்கள் ஐபோன் பயன்படுத்துவது வழக்கம்.
ஆனால் திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப எத்தனை தொழில் நுட்பங்கள் வந்தாலும் அதையும் திருட்டு வேலை செய்வதற்கு ஹேக்கர்கள் உருவாகிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
இப்படித்தான் சீன நாட்டில் சேர்ந்த ஹேக்கர்கள் பங்கேற்ற ஒரு போட்டி செங்டு நகரில் வைத்து நடைபெற்றுள்ளது. அதில் ஹேக்கர்கள் தங்கள் திருட்டு திறமையை காண்பித்துள்ளனர்.
ஐஓஎஸ் 15.0.2 சாப்ட்வேர் மூலமாக செயல்படக்கூடிய சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஐபோன் 13 ப்ரோ வகை மாடல் போனை வெறும் ஒரு வினாடிகளுக்குள் ஹேக் செய்துள்ளனர் ஹேக்கர்கள். ஐபோன் மொபைல் போனிலேயே இதுதான் லேட்டஸ்ட் மாடல் என்பது குறிப்பிடத்தக்கது.
டியான்ஃபு கோப்பை என்ற பெயரில் இது போல ஹேக்கர்கள் பங்கேற்கும் போட்டிக்கு சீனாவில் ஏற்பாடு செய்யப்பட்டு ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.
ஆப்பிள், கூகுள், மைக்ரோசாப்ட் போன்ற பல்வேறு நிறுவனங்களின் உபகரணங்களை இந்த நிகழ்ச்சியின்போது ஹேக்கர்கள் ஹேக் செய்து தங்கள் திறமையை வெளிக்காட்டினார்கள்.
குன்லுன் டீம், ஐபோன் 13 ப்ரோ வகை செல்போனை நேரலையில் மேடையில் வைத்து 15 வினாடிகளுக்குள் ஹேக் செய்து காட்டியுள்ளது. ஐபோனில் உள்ள சபாரி வெப் பிரவுசர் ரிமோட் என்ற தொழில்நுட்பத்தின் மூலமாக இவ்வாறு லாக் செய்யப்பட்ட செல்போனுக்குள் புகுந்து தங்கள் கைவரிசையை காட்டி உள்ளது இந்தக் குழு.
இதேபோன்று, டீம் பங்கு என்ற அணி, ஐஓஎஸ் 15 சாப்ட்வேர் மூலமாக செயல்படும் ஐபோன் 13 ப்ரோ போனை, தொலைதூரத்திலிருந்து ஹேக் செய்து முதல் பரிசான 3 லட்சம் அமெரிக்க டாலர்களை வென்றுள்ளன.
ஏனென்றால் முதலில் ஹேக் செய்தவர்கள் 15 வினாடிகள் எடுத்துக் கொண்டனர் ஆனால் இந்த குழு வெறும் ஒரு வினாடியில் அதை செய்துள்ளது.
நம்பர்களை தாண்டி, பச்சை மற்றும் சிவப்பு ஆகிய பட்டன்களை மட்டுமே பயன்படுத்த தேவையுள்ள நமது பழைய நோக்கியா மாடல் போன்களை வைத்துக் கொள்வது தான் உங்களது ரகசியங்களை பாதுகாக்க இந்த உலகத்தில் ஒரே வழி போல.
எப்போது இணைய தளம் என்ற ஒன்று உங்கள் செல்போனில் இருக்கிறதோ அப்போது முதல் உங்களது சொந்த தகவல்கள் ஆபத்தில் இருக்கின்றன என்று அர்த்தம்.
இணையதள பண பரிமாற்றங்கள் எப்போதுமே ஆபத்தானவை என்பதற்கு இந்த சம்பவம் போன்றவை ஒரு எச்சரிக்கை மணியாக தான் ஒலித்துக்கொண்டு இருக்கின்றன.