ஐ.சி.சி. டி20 போட்டி – 10.11.2021
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –
முதல் அரையிறுதிப் போட்டி அபுதாபியில் இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளுக்கிடையே நடைபெற்றது. பூவாதலையா வென்ற நியூசிலாந்து அணி இங்கிலாந்து அணியை மட்டையாடச் சொன்னது. பவர்ப்ளே ஓவர்கள் முடிவதற்குள் இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் ஜானி பெயிர்ஸ்டோ 13 ரன்னில் ஆட்டமிழந்தார்.
ஒன்பதாவது ஓவரின் முதல் பந்தில் மற்றொரு தொடக்க வீரரான ஜாஸ் பட்லர் 29 ரன்னில் ஆட்டமிழந்தார். ஆனால் டேவிட் மலானும் (41 ரன்) மொயீன் அலியும் (51 ரன்) சிறப்பாக ஆடினர். இருப்பினும் இங்கிலாந்து அணி இருபது ஓவர் முடிவில் நாலு விக்கட் இழப்பிற்கு 166 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. 166 ரன் என்பது நல்ல ஸ்கோர்தான்.
அதிலும் நியூசிலாந்து அணி வீரர்கள் பவர்ப்ளே ஓவர்களில் இங்கிலாந்தை விட குறைவான ரன்கள் எடுத்தனர்; இரண்டு விக்கட்டுகள் இழந்தனர். மார்ட்டின் குப்டில், கேன் வில்லியம்ஸன் ஆகிய இரண்டு அருமையான ஆட்டக்காரர்கள் ஆட்டமிழந்திருந்தனர்.
இங்கிலாந்து 50 ரன்கள் எடுக்க 45 பந்துகள் எடுத்துக்கொண்டனர்; அதையே நியூசிலாந்து 54 பந்துகளில் எடுத்தனர். 100 ரன்களை எடுக்க இங்கிலாந்து அணி 84 பந்துகள் எடுத்துக்கொண்டனர்; ஆனால் நியூசிலாந்து அணியினருக்கு 88 பந்து தேவைப்பட்டது.
18.2 ஓவருக்குப் பிறகு மூன்று சிக்சர்கள், ஒரு ஃபோர், சில ஒன்றுகள், ஒரு இரண்டு என 19ஆவது ஓவர் முடிவில் நியூசிலாந்து அணி இங்கிலாந்து ஸ்கோரைத் தாண்டியது. கோப்பையை வெல்லக்கூடிய அணி என எதிர்பார்க்கப்பட்ட இங்கிலாந்து அணி தோல்வியைச் சந்தித்தது.
நியூசிலாந்து அணி நாலு முறை டி20 உலகக்கோப்பை அரையிறுதியில் விளையாடியிருக்கிறது. இந்த வெற்றியோடு மூன்று முறை வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்குச் சென்றிருக்கிறது. ஆனால் இதுவரை கோப்பையை வென்றதில்லை.
நியூசிலாந்து அணியோடு இறுதியாட்டத்தில் மோதப்போவது யார் என்பது நளைய மற்றொரு அரையிறுதி ஆட்டமான பாகிஸ்தான் ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான ஆட்டத்தில் தெரியும்.