– கே.எஸ் . இராதாகிருஷ்ணன்
இந்திய பெருங்கடலிலும் இலங்கையிலும், குறிப்பாக திருகோணமலை துறைமுகம், ஏன் கச்சத்தீவு வரை, சீனாவின் ஆதிக்கம் வந்துவிட்டது. இதனை முறியடிக்க கூடிய வகையில் இந்தியாவினுடைய செயல்பாடுகள் இருக்க வேண்டியது அவசியம்.
தென்மாநிலங்களில், அதாவது தமிழகம், கேரளத்துடைய பாதுகாப்பை கருத்தில் கொண்டு திட்டங்களை மத்திய அரசு செய்ய வேண்டும். தற்போது மத்திய அரசு அந்தமான் தீவில், பல்வேறு ராணுவ தளங்களை அமைத்து இந்த சூழலை முறியடிக்க பணிகளை செய்து வருகிறது என்று செய்திகள் வருகின்றன. அந்தமான் மட்டுமல்ல தமிழகத்தின் தென்முனையில் அதிலும் குறிப்பாக குமரி மாவட்டம், ராமேஸ்வரம் கேரளாவின் தென் பகுதியிலும் இராணுவம் கடற்படை மற்றும் விமானப்படையினுடைய தளங்களை அதிகரிக்க வேண்டும். இதுவரை வட கிழக்கிலும், வடக்கிலும் சீனாவினுடன் போர் நடந்தது. வடமேற்கில் பாகிஸ்தானுடன் போர் நடந்தது. கூடங்குளம் அணுமின் நிலையத்தில் ஏற்கனவே அதன் கழிவுகளை அங்கேயே புதைப்பது என்பது நல்லது அல்ல. தமிழகம் குப்பை கூடை அல்ல, மகேந்திரகிரி அனு திரவ நிலையம், தும்பா ராக்கெட் திருவனந்தபுரத்தில் ஐஎன்ஸ் கட்டபொம்மன் என்று நாங்குநேரியில், இப்படியெல்லாம் ஒரு கேந்திர தளங்கள் தெற்கே உள்ளன. ராமேஸ்வரம் பக்கத்தில் ராணுவ தளங்களும் அமைந்துள்ளன. இதெல்லாம் பாதுகாக்கும் வகையில் முடிவுகள் இருக்க வேண்டும்.
அது மட்டுமல்ல, தூத்துக்குடி துறைமுகத்திற்கு ஒரு முக்கியத்துவம் தர வேண்டும். அண்ணா முதல்வரானவுடன் எழுச்சி நாள் நடத்தினார். ஒரு முதல்வரே ஒரு போராட்டக் களத்தில் இறங்கியது வங்கத்தில் டாக்டர் பி.சி.ராய் போல போராட்ட களத்தில் இறங்கியதை தமிழகத்தில் முதன்முதலாக நடந்தது. தூத்துக்குடி துறைமுகம், சேது சமுத்திரத் திட்டம், சேலம் இரும்பாலை அமைக்க வேண்டும் என்று அவர் எழுச்சி நாள் நடத்தி தமிழகமெங்கும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, மத்திய அரசுக்கு, இந்திரா காந்தி தலைமையில் இருந்த மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது.
இப்படிப்பட்ட நிலையில் தூத்துக்குடி துறைமுகம் ஒரு கேந்திரப் பகுதி. தமிழகத்தின் தென்மாவட்டங்களுக்கு, தொழில், ஏனைய வளங்கள் கூடுதலாக தூத்துக்குடி துறைமுகம் வளர்ச்சி, அதனுடைய முன்னேற்றம் முக்கியமான காரணியாகும். தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம், ஏற்றுமதி-இறக்குமதியில் வேகமாக நகர்வு உள்ள பகுதியாகும். கடந்த கட்டங்களில், இந்த நிலையில் 99.9% இந்த பணிகளை வெற்றிகரமாக நடத்தி உள்ளது.இணைய வழி ஆன்லைன் பரிமாற்றத்தில் நாட்டிலேயே முதல் துறைமுகமாக தூத்துக்குடி விளங்குகின்றது. 15 கண்டெய்னர் பிரைட் ஸ்டேஷன்கள், ஒரு உள்நாட்டு சரக்கு பெட்டக முனையம், அதேபோலவே நாங்குநேரி, கங்கைகொண்டான் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் போன்றவை முக்கியமான விடயங்களாக தூத்துக்குடி துறைமுகத்தில் சார்ந்து பணிகளில் உள்ளன. ஏற்கனவே தூத்துக்குடி மாவட்டத்தில் கயத்தார், கோவில்பட்டி விமான நிலையத்தை சீர்படுத்த வேண்டும். இப்படி செயல்படுத்தினால் தென்மாவட்டங்களில் வளர்ச்சி பெறும்.
சேது சமுத்திரத் திட்டம், திட்டமிடப்பட்டு பின் முடக்கப்பட்டு விட்டது. இந்த நிலையில் மதுரைக்கு தெற்கே உள்ள வளர்ச்சியை மனதில் கொண்டு, தூத்துக்குடி துறைமுகத்தை முன்னிலைப்படுத்தி திட்டங்களை மத்திய அரசு செய்ய வேண்டும். பிரதமர் கோவையில் பேசும்பொழுது தூத்துக்குடி துறைமுகத்தை முன்னெடுப்பதற்கான அனைத்து கடமைகளையும் மத்திய அரசு செய்யும் என்று ஒரு உறுதிமொழியை கொடுத்தார். கடந்த 2001 பிப்ரவரி மாதம் அவர் பேச்சில் குறிப்பிட்டபடி இதுவரை அதற்கான திட்ட மதிப்பீடுகளை வெளிப்படுத்தவில்லை.
தமிழகத்தில் வடக்கே காட்டுப்பள்ளி, எண்ணூர், அதேபோல கிருஷ்ணபட்டினம் போன்ற துறைமுகங்கள் ஒரு பக்கம் இருந்தாலும், கேரளத்தின் தெற்கே விழிஞ்சியம் துறைமுகம், அதானி குழுமம் முன்னெடுக்கின்றது.
தூத்துக்குடி துறைமுகம் இயற்கையான துறைமுகம். அனைத்து வகை சரக்குகள் கையாள்வதற்கு எளிதாக நடைமுறைப்படுத்தப்படும். இப்படிப்பட்ட துறைமுகத்தை மேலும் வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வது தான் நாட்டின் முன்னேற்றத்திற்கு முக்கிய காரணியாக தென்முனையில் அமையும்.
இன்றைக்கு ஒட்டுமொத்த சீனாவின் பங்களிப்பில் இலங்கையில் ஹம்பன் தோட்டா துறைமுகம், கொழும்பில் உள்ள துறைமுக முனையும், ஏன் கச்சத்தீவு வரை சீனாவின் ஆதிக்கம் வந்துவிட்டது. ஒருபக்கம் சீனாவின் சில்க் வழி பாதை லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கும், ஆப்பிரிக்க நாடுகளுக்கும் வணிகத்திற்கு. இப்படிப்பட்ட நிலையில், தூத்துக்குடி துறைமுகம் பலமாக இருந்தால்தான் நல்லது.
அந்தமானில் இந்திய இராணுவ பலத்தை பலப்படுத்தினாலும், தமிழகத்தில் குறிப்பாக மதுரை, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இராணுவ பலத்தை பலப்படுத்த வேண்டும். அப்படி பலப்படுத்தும் போது, அங்கேயே வேலை வாய்ப்புகள், வேறு தொழில்கள் வளர வாய்ப்புகள் உண்டு. அதுபோல, கேரளத்தின் தென்பகுதி திருவனந்தபுரம், கொல்லம் வரை அங்கேயும் ராணுவத்தை பலப்படுத்தவேண்டும். சீனாவின் ஆதிக்கத்தினால். எப்போதும் வேண்டுமானாலும் எதுவும் நடக்கலாம் என்ற ஒரு சூழலில் நமக்கான பாதுகாப்பு முக்கியமான ஒரு சூழலாகும். இதில் அரசியல் ஒன்றுமில்லை. நாட்டின் பாதுகாப்பு, நாட்டின் வளர்ச்சி குறிப்பாக தென் தமிழகம் வளர்ச்சி பெற ராணுவம் பலப்படுத்தவேண்டும். தூத்துக்குடி துறைமுகம் வரவேண்டும். கயத்தார், கோவில்பட்டியில் விமான நிலையங்கள் செயல்பாட்டுக்கு கொண்டுவரவேண்டும். குமரிமுனையில் சுற்றுலா திட்டங்களை மத்திய அரசு தீட்ட வேண்டும். இவையெல்லாம் இல்லாமல், மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் உள்ள பாபநாசம், குற்றாலம், திற்பரப்பு போன்ற பகுதிகளிலும் சுற்றுலா திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். இதை முன்னெடுத்தால் நிச்சயமாக தமிழகத்தின் தென் மாவட்டங்கள் வளர்ச்சி பெறும். அந்தமானில் ஒரு பக்கம் திட்டங்கள் இருந்தாலும், இதையும் கவனிக்க வேண்டியது மத்திய அரசின் பொறுப்பாகும்.