கும்பகோணம்:
கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் எரிவாயு சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயிலின் பெரிய பிரகாரத்தில் இந்த தீ விபத்து ஏற்பட்டது.
பக்தர்களுக்கு தேநீர் வழங்கும் இடத்தில் சிலிண்டரில் ஏற்பட்ட வாயு கசிவால் இந்தத் தீவிபத்து ஏற்பட்டது என்றாலும் அங்கிருத பக்தர்கள் உடனடியாக செயல்பட்டு தீயை அணைத்தனர். உடனடியாக தீ அணைக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
கோவில்களில் திடீர் திடீரென தீ பிடிக்கும் சம்பவங்கள் தொடர்வது பக்தர்களிடம் பீதியைக் கிளப்பியிருக்கின்றது. அண்மையில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் கிழக்கு கோபுரம் பகுதியில் இருந்த கடைகளில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் பல நூற்றாண்டு கால பழைமையான மண்டபம் நாசமானது. தொடர்ந்து தீ விபத்தின் வெப்பத் தாக்கத்தால், சந்நிதி மேற்கூரை இடிந்து விழுந்தது.
இதன் பின்னர், ஆடல்வல்லானாம் நடராசப் பெருமானின் பஞ்ச சபைகளில் ஒன்றான திருவாலங்காடு கோவில் தல விருட்சம் பற்றி எரிந்தது. அடுத்து வேலூர் சத்துவாச்சாரி அம்மன் கோவில் தேர் தீப்பிடித்தது. அடுத்து, தற்போது கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் கோயிலில் எரிவாயு சிலிண்டர் கசிந்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இப்படி அடுத்தடுத்து கோவில்களில் தீ விபத்து ஏற்படுவது ஏன் என்ற ஐயம் பொதுமக்களிடையே எழுந்துள்ளது, இதனால் பீதி அடைந்துள்ள பக்தர்கள், இதனால் ஏதும் பேரழிவுகள் நிகழுமோ என்று அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.