குஜராத் மாநிலம் சூரத் தொகுதி பாஜக., வேட்பாளர் முகேஷ் தலாக் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். சூரத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் தகுதி நீக்கம் ஆன நிலையில், மற்ற அனைத்து சுயேட்சை வேட்பாளர்களும் வாபஸ் பெற்றதால் முகேஷ் தலாக் தேர்வு செய்யப் பட்டுள்ளார்.
குஜராத்தில் மொத்தம் உள்ள 26 நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளுக்கும் வரும் மே மாதம் 7ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனுத் தாக்கல் கடந்த 19ம் தேதியுடன் நிறைவடைந்தது.
மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது. அப்போது சூரத் தொகுதியில் போட்டியிட மனுத்தாக்கல் செய்திருந்த காங்கிரஸ் வேட்பாளர் நிலேஷ் கும்பானியை முன்மொழிந்திருந்த 5 பேரில், மூன்று பேர், அது தங்களது கையெழுத்து இல்லை எனத் தெரிவித்தனர். இதனால் வேட்புமனுவை முன்மொழிந்த நபர்களின் முரண்பாடான தகவல்களால் காங்கிரஸ் வேட்பாளர் நிலேஷ் கும்பானியின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது.
இதனால், சூரத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் களமிறங்க முடியாத நிலை ஏற்பட்டது. அதே நேரம், சூரத் தொகுதியில் மற்ற அனைத்து வேட்பாளர்களும் வாபஸ் பெற்றனர். இதை அடுத்து பாஜக., வேட்பாளர் முகேஷ் தலாக் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். நாடாளுமன்றத் தேர்தல் முடியும் முன்பே முதல் எம்.பி.,யை பாஜக., பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.