அஜீரண வயிற்றுவலி
அரைத் தேக்கரண்டி அளவு சீரகத்தை எடுத்துக்கொள்ளவேண்டும். அதேபோல் ஒரு புளியங்கொட்டை அளவுக்கு உப்பை எடுத்துக்கொள்ள வேண்டும். இரண்டையும் அம்மியில் வைத்து மைபோல அரைத்து அதை அப்படியே மென்றுதின்றுவிட வேண்டும். அதன் பின் வெதுவெதுப்பான வெந்நீர் அருந்தவேண்டும். அவ்வாறு செய்தால் இரண்டே வேளையில் வயிற்றுவலி குணமாகிவிடும்.
கால் ரூபாய் எடை அளவுக்கு பெருங்காயத்தையும், இரண்டு புளியங்கொட்டை அளவுக்கு உப்பையும் எடுத்து தூள் செய்யவேண்டும். பின்பு அவற்றை ஒரு டம்ளரில் இட்டு மோர் ஊற்றி நன்றாகக் கலக்கி குடித்துவிட்டால் அஜீரண வயிற்றுவலி அகன்றுவிடும்.
வாய்வு வயிற்றுவலி
கால் ரூபாய் எடை அளவுக்கு பெருங்காயத்தை எடுத்து நெய்விட்டு வறுத்து தூளாக்க வேண்டும். பின்பு அதை வாயிலிட்டு மென்று விழுங்கி வெந்நீரைக் குடிக்கவேண்டும். அவ்வாறு செய்தால் வாய்வு சம்பந்தமான வயிற்றுவலி குணமாகும்.
கால் ரூபாய் எடை அளவுக்கு பெருங்காயத்தை எடுத்து நெய்யில் வறுத்து அரை நெல்லிக்காய் அளவு உப்பைச் சேர்த்து பொடியாக தூள் செய்ய வேண்டும். பின்னர் அதை சுடுசோற்றில் இட்டுப்பிசைந்து உண்டுவர வாய்வு தொடர்பான வயிற்றுவலி குனமாகும்.
உஷ்ண வயிற்றுவலி
ஒரு எலுமிச்சம்பழத்தை நறுக்கி விதைகளை எடுத்துவிட்டு ஒரு கண்ணாடி டம்ளரில் பிழியவேண்டும். பின்பு அந்த டம்ளர் நிறையுமளவிற்கு தண்ணீர் ஊற்றி இரண்டு சிட்டிகை அளவு இட்லி சோடாமாவைப் போட்டுக் கலக்கினால் அது பொங்கும். உடனே அதைக்குடித்துவிட வேண்டும். இவ்வாறு திளம் ஒருவேளை அருந்தினால் உஷ்ண வயிற்றுவலி குணமாகிவிடும்.
நாட்பட்ட வயிற்றுவலி
சீரகம், ஓமம், கொத்தமல்லி இவை ஒவ்வொன்றையும் அரை ரூபாய் எடை அளவுக்கு எடுத்து வறுத்து அம்மியில் வைத்து அரைக்கவேண்டும். பின்பு அதை ஆறு உருண்டைகளாகச் செய்துகொள்ளவேண்டும். தினமும் இருவேளை ஒவ்வொரு உருண்டையை உண்டுவர நாட்பட்ட வயிற்றுவலி குணமாகும்.