மதுரை: அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா புஷ்பா எம்.பி, திருமணம் செய்து கொள்ளப் போவதாக கூறப்படும் ராமசாமி மீது அவரது மனைவி அளித்த புகாரின்பேரில் திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் போலீஸார் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா புஷ்பா எம்.பி. தனது கணவரை விவாகரத்து செய்துவிட்டு ஓரியண்டல் பல்கலைக்கழக துணைவேந்தரான ராமசாமியை திருமணம் செய்து கொள்ளப் போவதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் மதுரை புதுமாகாளிப்பட்டியைச் சேர்ந்த சத்யபிரியா மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சில நாள்களுக்கு முன்பு புகார் அளித்தார்.
அதில் ஓரியண்டல் பல்கலைக்கழக துணைவேந்தர் என்று கூறிக்கொள்ளும் ராமசாமி தன்னுடைய கணவர் என்றும், நீதிபதி என்று ஏமாற்றி திருமணம் செய்து கொண்டதாகவும், பெண் குழந்தை பிறந்த பிறகு தன்னை விட்டுச்சென்று விட்டார் என்றும் தெரிவித்திருந்தார்.
மேலும் கணவர் ராமசாமி மற்றும் அவரது சகோதரிகள் செல்வி, பாரதி ஆகியோர் வரதட்சிணை கொடுமை செய்வதாக திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் புகார் அளித்துள்ளதாகவும் தெரிவித்தார். புகாருக்கு ஆதாரமாக ராமசாமியுடன் திருமணம் நடந்தபோது எடுத்த புகைப்படத்தையும் வழங்கினார்.
இந்நிலையில் சத்யபிரியா அளித்தப் புகாரின்பேரில் திருப்பரங்குன்றம் போலீஸார் விசாரணை நடத்தி வந்த நிலையில் சட்ட ஆலோசனை மையத்துக்கும் புகார் அனுப்பப்பட்டது. இதைத்தொடர்ந்து சத்யப்பிரியா புகாரின்மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, கணவர் ராமசாமி, அவரது சகோதரிகள் செல்வி, பாரதி ஆகிய மூவர் மீதும் திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் போலீஸார், 3 பிரிவுகளின் கீழ் வெள்ளிக் கிழமை வழக்குப்பதிவு செய்துள்ளனர்
முன்னதாக, அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து கட்சியின் பொதுக்குழு, செயற்குழு கூட்டம் கடந்த ஆண்டு கூடியபோது, சசிகலா புஷ்பாவின் கணவர் லிங்கேஸ்வரா பொதுச் செயலாளர் பதவிக்கு சசிகலா புஷ்பா போட்டியிடப் போவதாகக் கூறி அ.தி.மு.க தலைமை அலுவலகத்துக்கு மனுத்தாக்கல் செய்ய வந்தார். அப்போது அந்தக் கட்சியில் உள்ள நிர்வாகிகளுக்கும், சசிகலா புஷ்பாவின் கணவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றியதில் அவருடைய கணவர் தாக்கப்பட்டார். இதுதொடர்பாக காவல் நிலையத்திலும் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த விவகாரத்துக்குப் பிறகு அரசியல் மற்றும் பிற விவகாரங்களிலிருந்து ஒதுங்கியே இருந்தார் சசிகலா புஷ்பா. இந்த நிலையில்தான் அவருக்கும் தில்லியைச் சேர்ந்த ராமசாமி என்பவருக்கும் திருமணம் நடைபெற உள்ளதாகத் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அவர்களுடைய பெயர்கள் இடம்பெற்ற திருமண அழைப்பிதழும் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது. தில்லியில் வரும் மார்ச் 26-ஆம் தேதி ராமசாமி என்பவரை சசிகலா புஷ்பா மணக்கப்போவதாக அந்த அழைப்பிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாப்பிள்ளையான ராமசாமி ஓரியண்டல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அவர், நாடாளுமன்றத்தின் சட்ட ஆலோசகராக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மகாளிபட்டியிலிருந்து கைக்குழந்தையாயோடு வந்த சத்யப்பிரியா தமக்கும் சசிகலா புஷ்பா திருமணம் செய்ய உள்ளதாக இருந்த ராமசாமிக்கும் 2014ம் ஆண்டே திருமணம் நடைபெற்றது எனக்கூறி அதற்கான ஆதாரங்களை காண்பித்தார். மேலும், அவருடன் சேர்ந்து வாழ விரும்புவதாகவும் கண்ணீருடன் குறிப்பிட்டார். அதோடு, தனது கணவர் ராமசாமி சசிகலா புஷ்பாவை திருமணம் செய்யப் போவதாக வந்த தகவல்கள் உண்மைதானா என தனக்கு உறுதி செய்யப்பட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை வைத்தார் என்பது குறிப்பிடத் தக்கது.