சேலத்தில் ஞாயிற்றுக்கிழமை சேலம்-சென்னை விமான சேவையைத் துவக்கி வைத்தார்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும். இது மத்திய அரசின் ‘உடான்’ திட்டத்தின் கீழ் நகர்ப்புற வளர்ச்சிக்காக செயல்படுத்தப் படுவது.
இந்த விழாவில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, உடான் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டம் தமிழகத்திற்கு பல்வேறு நலன்களை நிச்சயம் செயல்படுத்தும். மாநில அரசுகள் மத்திய அரசோடு இணைந்து பணியாற்றினால்தான் மக்களுக்குத் தேவையான திட்டங்களை எளிதில் செயல்படுத்த முடியும். அந்த வகையில், தமிழகம் இணக்கமாக இருப்பதால்தான் எதைக் கேட்டாலும் அதை நிறைவேற்றித் தர பிரதமர் மோடி தயாராக இருக்கிறார்.- என்றார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசிய இந்த உண்மைச் சூழலின் பின்னணியைப் பார்த்து வருகிறோம்.
இரண்டாவது முதலீட்டாளர் மாநாடு குறித்த அறிவிப்பை தமிழக அரசு செய்த வேளையில், இந்தக் கட்டுரையில் வருங்காலத்தில் தமிழக அரசு எந்தத் துறைகளில் கவனம் செலுத்தலாம் என்பது குறித்த நமது யோசனைகளை முன்வைப்போம்.
கடந்த காலத்தில், ரூ.3000 கோடி அளவு வரையில் வருமானம் வரக்கூடிய நடுத்தர அளவு நிறுவனங்களில் கவனம் செலுத்தியது தமிழகம். நல்ல நேரமாக தமிழகத்தில் வணிக நிறுவனங்கள் ஒரு கௌரவமான முதலீடுகளைச் செய்து, தமிழகத்தின் தொழில்துறையில் விரிவாக்கத்தைச் செய்தன. பெரிய அளவிலான ஆட்டோ மொபைல் நிறுவனங்களைத் தவிர, மிகப் பெரும் முதலீடுகள் மிக அரிதாகவே இருந்தன. மிகப் பெரும் அளவிலான நுகர்பொருள் உற்பத்தித் துறை முதலீட்டிலும் மாநிலம் பின் தங்கியது. எண்ணெய் சுத்திகரிப்பு, பெட்ரோ கெமிக்கல், உரங்கள், மின்சாரம், மருந்துகள் மற்றும் ஃபார்மா நிறுவனங்கள் என பல துறைகளில் பெரும் அளவிலான முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழகம் பின் தங்கிப் போனது!
குறிப்பாக, துறைமுக வளர்ச்சியில் கவனம் செலுத்தாமல் போனது தமிழகம். துறைமுகங்களின் வளர்ச்சியில் பெரிய அளவிலான முதலீடுகள் ஈர்க்கப்படுவது அவசியத் தேவை. இதில், குஜராத் மிகச் சிறந்த முன்னுதாரத்தைக் கொண்டுள்ளது. 41 சிறிய துறைமுக உள்கட்டமைப்பு மேம்பாட்டின் மூலம் குஜராத் கடற்கரையோரத்தில் அமைந்த தனியார் நிறுவனங்கள், எண்ணற்ற தொழிற்சாலைகளின் தேவையை நிறைவு செய்கின்றன.
நீண்ட கடற்கரைப் பாதையைக் கொண்ட தமிழ்நாடு, இதுபோன்ற வளர்ச்சியில் கவனம் செலுத்தவில்லை. சென்னை மெட்ரோ நகருக்கு அருகில் அமைந்துள்ள மூன்று பிரதான துறைமுகங்களான சென்னை, காட்டுப்பள்ளி, எண்ணூர் துறைமுகங்களும் சிறிய அளவிலேயே போட்டிகளைச் சமாளிக்கின்றன. மெட்ரோவின் இதயப் பகுதியாக அமைந்த சென்னைத் துறைமுகம், கொஞ்சம் கொஞ்சமாக நலிவுற்று வருகிறது. தனது கையாளும் திறனை இழந்து, எண்ணூர் துறைமுகத்துடன் இணைத்துவிடலாம் என்ற ரீதியில், செயல்பாடுகளை அது முற்றிலும் நிறுத்திக் கொள்ளலாம்! மாநில அரசின் அதிகார எல்லைக்கு உட்பட்ட நீண்ட கடற்கரையோரத்தில் சிறிய துறைமுகங்கள் நலிவைச் சந்தித்து வரும் போது, ஒன்று மிகச் சிறு வளர்ச்சியைக் காண்கிறது.
டி.ஆர்.பாலு, ஜி.கே.வாசன் ஆகியோர் மிக நீண்ட காலத்துக்கு, கப்பல் மற்றும் துறைமுக வளர்ச்சித் துறையில், மத்திய அமைச்சர்களாக இருந்தனர். இருந்தும், அவர்களால் துறைமுகங்களின் வளர்ச்சியில் அல்லது கப்பல் துறையில் மிகச் சிறு தாக்கத்தையே ஏற்படுத்த முடிந்தது. துறைமுகங்களின் போர்டுகளில் தங்கள் கட்சிக்காரர்களை உள்ளே புகுத்துவதை டி.ஆர்.பாலு உறுதி செய்தார். சேது சமுத்திர திட்டத்தில் பினாமி நிறுவனங்கள் மூலம் பைகளை நிரப்பியதை அவ்வளவு எளிதில் யாரும் மறந்துவிட முடியாது.
ஜிகே.வாசனோ, எண்ணூர் துறைமுகத்தை காமராஜர் துறைமுகம் என்று பெயர் மாற்றுவதில் மட்டுமே முனைப்பாக இருந்தார். நல்ல வேளையாக தற்போது மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சராக இருக்கும் நிதின் கட்கரி, துறைமுக வளர்ச்சியிலும், கடற்கரையோர கப்பல் போக்குவரத்திலும் துடிப்புடன் செயல்பட்டு, கவனம் செலுத்தி வருகிறார். இதை பயன்படுத்தி, தமிழகம் அறிவு சார் கட்டமைப்பை உருவாக்கி, குறுகிய மற்றும் நீண்ட கால திட்டங்களுடன் துறைமுக வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும். சென்னைக்கும் மாமல்லபுரத்துக்கும் இடையே மிக விரைவான சேவை ஒன்று இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்பதை யோசித்துப் பாருங்கள்.
அதுபோல், குளச்சல் துறைமுகத் திட்டத்துக்கு ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டைகள் அகற்றப்பட வேண்டும். அரசியல் காரணங்களால் தூண்டிவிடப்படும் மக்களை சமாதானப் படுத்தி குளச்சல் துறைமுக திட்டத்தை சீரிய முறையில் செயல்படுத்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
மாநில அரசோ, மிகச் சிறிய திட்டங்களில், அதுவும் வாக்காளர்களைக் கவரும் வகையிலான உணர்ச்சிபூர்வமான திட்டங்களில் தனது முழு கவனத்தையும் செலவழித்து வருகிறது. அம்மா உப்பு, அம்மா சிமிண்ட், தற்போது அம்மா பெட்ரோல் நிலையங்கள் என! இவை, தங்கள் கட்சிக்காரர்கள் ஒரு சிலரே இவற்றை முகவர்களாக எடுத்து நடத்தும் வகையில், அவர்களை திருப்திப் படுத்துவதைத் தவிர வேறு ஒன்றும் பெரிதாக சாதித்துவிடப் போவதில்லை. கட்சிக்காரர்கள் பெட்ரோல் முகவர்கள் ஆகும் இந்தப் பழைய அணுகுமுறை, காங்கிரஸ் காலத்திலும், தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக் காலத்திலும் இருந்தது. இதனையே ஏன் திரும்பத் திரும்ப இங்கும் கையாள வேண்டும்?
அடுத்து நிறைவாக, மத்திய பொதுத்துறை முதலீட்டை ஊக்குவிக்க என்ன செய்யலாம் என்பது குறித்தும், தமிழக அரசு எப்படி இணக்கமாக நடந்து கொண்டு, மாநிலத்தின் தொழில் வளர்ச்சிப் பணிகளில் கவனம் செலுத்த வேண்டும் என்பது குறித்த நமது கருத்துகளை முன்வைப்போம்.