பெங்களூர்: கர்நாடக முதலமைச்சராக புதன்கிழமை பதவியேற்றுக் கொண்ட குமாரசாமி பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கு கோருகிறார். முன்னதாக ஒரே நாளில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தி வென்று காட்டுவேன் என்று கூறியிருந்தார்.
கர்நாடக மாநில முதல்வராக மஜத.,வின் குமாரசாமி நேற்று மாலை பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் வஜூபாய் வாலா நேற்று மாலை விதான் சௌதா வளாகத்தில் பதவி பிரமாணம் செய்து வைத்தார். அவரைத் தொடர்ந்து துணை முதல்வராக காங்கிரஸ் கட்சியின் பரமேஸ்வரா பதவியேற்றுக் கொண்டார்.
இந்தப் பதவியேற்பு விழா நிறைவடைந்த பின்னர் அனைத்து காங்கிரஸ், மஜத., எம்.எல்.ஏக்களும் பாதுகாப்பாக ஹில்டன் ஓட்டலுக்கு அழைத்துச் செல்லப் பட்டனர். சட்டப் பேரவையில் குமாரசாமி பெரும்பான்மை ஆதரவை நிரூபிக்கும் வரை எம்.எல்.ஏக்கள் அங்கேயே தங்க வைக்கப் பட்டிருப்பார்கள்.
சட்டப்பேரவை நாளை மதியம் 12.15க்குக் கூடும்போது, குமாரசாமி நம்பிக்கை வாக்கு கோரும் தீர்மானத்தை கொண்டுவருகிறார். இதன்மீது விவாதம் நடத்தப்பட்டு பின்னர் வாக்கெடுப்பு நடைபெறும். பெரும்பான்மைக்கு 112 பேர் ஆதரவு இருந்தால் போதும். காங்கிரசுக்கு 78 இடங்களும், மஜத.,வுக்கு 37 இடங்களும் என கூட்டணி அரசின் பலம் 118 ஆக இருப்பதால், நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாஜக.,வின் பலம் 104.