இந்திய விஞ்ஞான சரித்திரத்தின் ஒரு தலையாய பகுதி, அமரர் அப்துல் கலாம்.
இந்தியாவில் அணுவைத் துளைத்து, அதில் அமைதியையும், அன்பையும் தவழவிட்ட அந்த மாமேதை இந்திய மண்ணில் பிறந்த காலம்!
இராமேஸ்வரத்தில் தொடங்கி , இந்தியா முழுவதும் தன் திறத்தால் வலம் வந்து புகழ் கண்ட பெருமான், அகில உலகத்தையும் தன் அறிவால், அன்பால், பாசத்தால், பரிவால் கொள்ளை கொண்டவர். மறைந்த பிறகும் நம்மிடையே மங்காமல் வாழும் மேதை கலாம் அவர்களுக்கு சிங்கப்பூரில் ஒரு மணிமகுடம்! அறிவையும், திறமையையும் மட்டுமே மதிக்கும் சிங்கப்பூர், கலாம் அவர்களைச் சிறப்பிப்பதில் ஆச்சரியம் எதுவும் இல்லை தான்.
சமூக வளர்ச்சியையே அடி நாதமாகக் கொண்டு எல்லை கடந்து வாழ்ந்த அந்த விஞஞானிக்கு , சிங்கப்பூரில் உருவாக்கப்பட்ட ஓர் உன்னத அமைப்பு, அப்துல் கலாம் இலட்சிய சமூக அமைப்பு –
அவ் வமைப்பின் கோலகலத் துவக்கம் நேற்று பிஜிபி மண்டப அரங்கில் அரங்கேறியது. சிங்கப்பூரின் பல நாட்டுத் தூதரகங்களில் பணியாற்றியவரும், அப்துல் கலாம் அமைப்பின் தலைவருமாகிய திரு.கேசவபாணி, இந்தியாவின் சிங்கப்பூர் தூதர் திரு.ஜாவித் அஷ்ரப், சிறப்பு அழைப்பாளர் டாக்டர் பொன்ராஜ் போன்றோரின் சொற் சுவைகளுடன், மென்குரல் பாடகி வைக்கம் விஜயலட்சுமியின் எளிமை பொங்கிய நீள் நேர இசைக் கச்சேரியும் சிறப்பிற்கு சிறப்புச் செய்தவை.
– ஏ.பி.ராமன் (சிங்கப்பூர்)