குணம் மணம் காரம் நிறைந்த பட்டி மன்ற நிகழ்ச்சி!
குகன், சுக்கிரீவன், விபிடணன் மூவரையும் முன்னிறுத்தி தமிழ் எழுத்தாளர் கழகம் நடத்திய பட்டி மன்றம், அந்தரத்தில் இந்திர லோகம் காட்டும் மாயாஜாலம்! தெரிந்த கதை நிகழ்ச்சிகள்-புரிந்த பாத்திரங்கள்-அறிந்ததை மட்டும் சொல்லித் தப்ப முடியாது, அறியாததையும் ஆய்வு செய்து தர வேண்டிய கட்டாயம்! இப்படிப்பட்ட சூழ்நிலையில் சிக்கினர் சிங்கப்பூரின் தமிழ் அறுவர் ராமனின் தம்பியராக ஏற்றுக் கொள்ளப்பட்ட குகன் சுக்கிரீவன்,விபீடணன் மூவரில் பெரிதும் ஏற்றம் பெற்றவர் யார்? முனைவர் மன்னை ராஜகோபாலன்-சுப.அருணாசலம் ( குகன்), முனைவர்கள் சரோஜினி செல்லகிருஷ்ணன் -கௌசல்யா (சுக்கிரீவன்), முனைவர். ந.செல்லகிருஷ்ணன் -திரு.மு சேவகன் (விபீடணன்) ஆகியோர், நம்மை சிரிக்க வைக்க முனையவில்லை. இலக்கியச் சிந்தனையில் ஆழ்த்தினர்.
குகன்: சொந்தத் தம்பிகள் அல்ல-வந்த தம்பிகள். ஆனாலும் தங்கத் தம்பிகள் என்றார் மன்னை ராஜகோபாலன். வேடன், குரங்கு, அரக்க நிலைத் தம்பிகளில் பலனடைந்த தம்பிகள் சுக்கிரீவனும், விபீடனும்! கைமாறு கருதாத் தம்பி குகனோ,பரதனின் ப்டை கண்டு சீறுகிறான்.அப்பிரானித் தனத்துடன் கையில் கிடைத்த தேனையும், மீனையும் அபரிமிதமான அன்போடு ஆராதிக்து அளிக்கிறான். ராமனைப் பிரியும்போது தன் உயிர் என மதிக்கிறான்.
‘உன் சுற்றம் என் சுற்றமில்லவா?’ என கம்பன் வழி, ராமன் பேசுவதைத் தொட்டுப் பேசிய சுப.அருணசலம், கங்கைக் கரையை கவ்னித்துக் கொள் என தொழன் குகனுக்கு ராமன் ஆக்ஞை இடுவதை நினைவுபடுத்தினார். ராமன் மட்டுமல்ல, ராம குடும்பமே குகனை ஏற்றுப் போற்றிய செய்தி, குகனுக்கு வலு சேர்த்தது.
சுக்ரீவனை ஏற்றம் காணச் செய்வதில் முனைவர் சரோஜினி காட்டிய வேகம், ஆர்வம் பாராட்டுக்குரியது. குகனைவிட ராமாயணத்தில் சுக்ரீவன் பல்சுவை கொண்ட பாத்திரம் என்பதில் சந்தேகம் இல்லை.சுக்ரீவன் ராமயாணப் பிற்பகுதியிலிருந்து பட்டாபிஷேகம் வரை தொடர்ந்து வருகிறது.ஆனால் குகப் படலம், அமுக்கித் தரப்பட்ட பல்லுணர்ச்சிகளின் தரமான சிறுகதை!
ராமனிடம் பலன் வேண்டி வந்தவனா சுக்ரீவன்? இல்லவே இல்லை என்கிறார் என் மனைவியை இழந்தேன். உதவி செய் என அந்த மலை நாட்டு மன்னன் சுக்ரீவன் எந்த இடத்திலாவது கேட்டிருக்கிறானா? என்ற அவருடைய கேள்வி இடம் பிடித்தது.(சுக்ரீவனின் துயர் வரலாற்றை ராமனிடம் சொல்பவன் அனுமன். “உருமை என்று இவற்கு உரிய் தாரமாம்”). தன் சொந்த பலத்தில் இலங்கை சென்ற சுக்ரீவன், யாரையும் காட்டிக் கொடுக்கச் செல்லவில்லை என்று குட்டு வைத்தார் முனைவர் சரோஜினி.
பலன் கருதாமல் வந்த சுக்ரீவன், ’எனக்கும் தரி’ எனக் கேட்காதவன். நீ எனக்கு பரதன் என்று ராமனாலேயே ஏற்றுக் கொள்ளப்பட்டவன் என்று சொன்ன பளீர்க் குரலி முனைவர் சரோஜினிக்கு, முனைவர் கௌசல்யா, வானர நாட்டின் தலைவன் சுக்ரீவன், ஒரு கானக அரசன் என்றார். வீரம், அறிவு, விவேகம் அனைத்தும் நிரம்பிய சுக்ரீவன், அண்ணனுக்காக எதையும் செய்யத் துணிந்த தம்பி என வாதாடினார்.
மூன்றாமவன் விபீடணனுக்குக் கொடி பிடித்து முனைவர் செல்லகிருஷ்னன் இறுதியாக வந்தபோது, சோர்வடைந்த அரங்கம் சுறுசுறுப்பானது.
விபீடணன் வழி காட்டித் தந்த வெற்றி தான் இலங்கை வெற்றி. ராமாயணத்தின் அரக்க அழிவு என்கிற கதைக் கோட்பாட்டிற்கேற்ப உதவியவன் விபீடணன். இந்திரஜித்தை வெல்லும் திறனை உணர்த்தி, ராவண வதத்திற்கு வழி வகுத்தவன் விபீடணன். சுக்ரீவனைப் போல் மதுவில் மயங்காதவன். கற்புக்கரசி சீதைக்குத் தொல்லை தந்த ராவணன் அழிவதை நியாயப் படுத்தியவன் விபீடணன். அவனே சரண் என்ற விபீடணனை சுக்ரீவனிடமோ, குகனிடமோ காண முடியவில்லை….. முனைவர் செல்லகிருஷ்ணன் பேச்சு, விபீடனனை ஏற்ற தம்பியாக ஆக்கிவிடுமோ என்ற சந்தேகத்தை உண்டாக்கியது. இணைப் பேச்சாளர் மு.சேவகன், தன் பங்கிற்கு விபீடணனைத் தூக்கிப் பிடிக்கும் சம்பவங்களை நினைவு படுத்தினார். ராமனிடம் சிரஞ்சீவி பட்டம் பெற்றவர் விபீடணன் மட்டுமே என்றார்.
அப்பீலே கிடையாது. குகன் தான் ஏற்றம் பெற்ற தம்பி! –
–ஏபி. ராமன் (சிங்கப்பூர்)