புது தில்லி: சபரிமலை தலத்தின் மரபுகளை மீறி, மத நம்பிக்கைக்கு எதிராக, அனைத்து வயதுப் பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப் பட்டுள்ளது.
சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற தீர்ப்புக்கு எதிராக, கேரளம் மட்டுமல்லாது, தமிழகம், உலக நாடுகளில் வாழும் தமிழர்கள், மலையாளிகள் என பக்தர்கள் திரண்டு, ஆர்ப்பாட்டங்களையும் கோஷங்களையும் எழுப்பி வருகின்றனர். இந்தத் தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனு கேரள அரசின் சார்பில் தாக்கல் செய்யப் படமாட்டாது என்று முதல்வர் பிணரயி விஜயன் அறிவித்தார். தொடர்ந்து தேவசம் போர்டும் சீராய்வு மனு தாக்கல் செய்யப் பட மாட்டாது என்றும், தீர்ப்பை அமல் படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாகவும் அறிவித்தது.
இந்த நடவடிக்கைகள் பக்தர்களிடையே மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதை அடுத்து, பந்தளம், பத்தனம்திட்ட முதலிய ஊர்களிலும், கேரளத்திலும் பரவலாக ஊர்வலங்கள் பிரமாண்டமான அளவில் நடைபெற்றன.
இந்நிலையில், சபரிமலை கோயிலில் பெண்களை அனுமதிக்கலாம் என்ற தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தேசிய ஐயப்ப பக்தர்கள் சங்கம் சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப் பட்டுள்ளது.