ராமநாதபுரம்: பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 111வது ஜயந்தி விழா மற்றும் 56ஆவது குருபூஜை விழாவை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் அமைந்துள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்தும், நினைவிடத்தில் மலர் வளையம் வைத்தும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
சுதந்திரப் போராட்ட வீரரும், பார்வர்டு பிளாக் கட்சித் தலைவருமான பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 111-வது ஜெயந்தி விழா மற்றும் 56-வது குரு பூஜை ஆகியவை, ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன் கிராமத்தில் இரு தினங்களுக்கு முன் தொடங்கியது.
அக்.28ம் தேதி, முதல் நாள் ஆன்மீக விழா காலை 5.15க்கு யாகசாலை பூஜையுடன் துவங்கியது. இரண்டாவது நாளான நேற்று அரசியல் விழா நடைபெற்றது. இன்று அரசு விழா நடைபெறுகிறது. இதை ஒட்டி, பசும்பொன்னுக்கு வந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வமும் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
முன்னதாக மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.