செங்கோட்டை: இந்துக்களின் பண்டிகையான தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு வெடிக்க யாரும் தடை போட முடியாது. திட்டமிட்டபடி பட்டாசு வெடித்து எங்கள் மகிழ்ச்சியை வெளிப் படுத்துவோம்.என இந்து முன்னணி மாநில துணைத் தலைவர் வி.பி.ஜெயக்குமார் நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய போது தெரிவித்தார்.
செங்கோட்டை காவல் நிலையத்துக்கு புகார் ஒன்று அளிப்பது தொடர்பாக, வழக்கறிஞர் அணியுடன் வந்திருந்தார் வி.பி.ஜெயக்குமார். அப்போது அவர் கூறியதாவது….
செங்கோட்டையில் விநாயகர் சதுர்த்தி பிரச்னைக்குப் பின் இரு சமுதாயத்தினரும் அமைதியாக இருந்து வருகிறார்கள். இந்த நேரத்தில் இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த சிலர் வாட்ஸ்அப் மூலமாக ஒரு தவறான கருத்தை பதிவு செய்து வருகிறார்கள்
அதில் இஸ்லாமிய மதத்திற்கு வராவிட்டால் சில பிரச்சனைகள் வரும் என்று கூறுகின்றார்கள். அந்த பிரச்னையை குறித்து நாங்கள் செங்கோட்டை காவல் நிலையத்தில் நமது வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்த சாக்ரடீஸ் மூலமாக செங்கோட்டை நகரக் காவல் ஆய்வாளரிடம் புகார் மனு அளித்துள்ளோம். அவரும் கண்டிப்பாக வழக்கு பதிவு செய்வேன் என்று உறுதிபடக் கூறியுள்ளார்.
இஸ்லாமிய அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஒரு தவறான எண்ணத்தோடு சமுதாயத்திற்குள் பிரச்னையை ஏற்படுத்தும் நோக்கத்தோடு செயல்படுவதை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது. ஆகவே காவல்துறை துரிதமாக நடவடிக்கை எடுத்து அவர்கள் மீது முறையாக வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறோம்.
வரும் தீபாவளியின் போது, குறிப்பிட்ட நேரத்தில்தான் வெடி வெடிக்க வேண்டும் என்று தமிழக அரசு, உச்ச நீதிமன்றம் ஆகியவை வலியுறுத்தியுள்ளன.
ஆனால் இந்துக்கள் உரிமையை நாங்கள் கண்டிப்பாக விட்டுக்கொடுக்க மாட்டோம்! எந்த நேரத்திலும் நாங்கள் வெடி வெடிப்போம்! நாங்கள் எங்கள் விருப்பம் போல், எல்லா நேரத்திலும் வெடிப்போம். தீபாவளியை நாங்கள் சிறப்பாக கொண்டாடுவோம் என்று இதன் மூலம் தெரிவித்துக் கொள்கின்றோம்
மேலும் குறிப்பிட்ட நேரத்தில் வெடித்தால், கண்டிப்பாக பல பிரச்சனைகள் ஏற்படும்! மாசு கட்டுப்பாடு பிரச்னைகள் ஏற்படும். உண்மையில் அரசு அதிகாரிகளும் உச்ச நீதிமன்றமும் மாசு கட்டுப்பாடு ஏற்பட வேண்டுமென்றால் முதலில் அரசு போக்குவரத்து கழக பேருந்துகளை ஆய்வு செய்து அதன் மூலம் வரும் புகையை ஆய்வு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்
எந்த நேரத்திலும் வெடிப்பது என்பது, நிச்சயமாக நீதிமன்ற அவமதிப்பு ஆகாது. இது கண்டிப்பாக நீதி மன்ற அவமதிப்புக்குள் வராது! ஏனென்றால் சாதாரண மக்களுக்கு இந்த விஷயம் தெரியாது! எல்லோரும் டிவி பார்ப்பவர்கள் கிடையாது! எல்லோரும் செய்தித்தாள் படிப்பவர்கள் கிடையாது. அவர்கள் வீட்டில் அவர்கள் வெடி வெடிப்பதை யாரும் தடுக்க முடியாது…. என்று கூறினார் வி.பி.ஜெயக்குமார்.