மத்திய தமிழகத்தை புரட்டிப் போட்ட கஜா புயலால், பலத்த சேதம் ஏற்பட்டிருக்கிறது. பல இடங்களில் சாலைகள் முழுதும் மரங்கள் சரிந்து, மின் கம்பங்கள் சாய்ந்து கிடக்கின்றன. மரங்கள் அதிகம் சரிந்து விழுந்ததில், வீடுகள் பல சேதமடைந்துள்ளன. குறிப்பாக, ஓட்டு வீடூகளும் குடிசைகளும் கஜா புயலில் கடும் சேதம் அடைந்துள்ளது.
கஜா புயலுக்கு முன்னாள் தமிழக முதல்வரும், திமுக., தலைவராக இருந்தவருமான கருணாநிதி பிறந்த வீடும் தப்பவில்லை. நாகப்பட்டினம் மாவட்டம், திருக்குவளையில் உள்ள கருணாநிதி பிறந்த வீடு, தற்போது நூலகமாக பராமரிக்கப் பட்டு வருகிறது. இங்கும், கஜா புயலால் வீட்டின் முன்பகுதியில் மரம் விழுந்து, ஓடுகள் உடைந்து கிடக்கின்றன. முன்பகுதியில் வைக்கப் பட்டிருந்த பெயர்ப் பலகை மீது மரம் விழுந்ததில், பெயர்ப் பலகை சேதமடைந்து சரிந்து விழுந்துள்ளது.
நாகை மாவட்டம், திருக்குவளையில்தான் மு. கருணாநிதி பிறந்தார்.