விதிமீறல் புகாரில் அமைச்சர் விஜயபாஸ்கர், எம்எல்ஏ ராஜன் செல்லப்பா ஆகியோர் மீது நடவடிக்கை கோரி டிராபிக் ராமசாமி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில்,”தமிழக சுகாதாரத்துறை சார்பில் புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் கிராமத்தில் சுகாதார நல்வாழ்வு முகாம் நடந்தது. அப்போது சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் இரு சக்கர வாகனங்களில் சென்று விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டனர். இந்த இரு சக்கர வாகன பிரசாரத்தில் ஈடுபட்ட அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட பலர் ஹெல்மெட் அணியவில்லை. உயர்நீதிமன்ற உத்தரவு மீறப்பட்டுள்ளது.
இது தெரிந்தும், இலுப்பூர் காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மோட்டார் வாகன சட்டத்தை மீறும் வகையில் உரிய உரிமம் இன்றியும், ஹெல்மெட் அணியாமலும் இரு சக்கர வாகனத்தை ஓட்டியது குற்றம். சட்டம் அனைவருக்கும் சமம் என்ற வகையில் அமைச்சரின் செயலும் குற்றமாகும். இது குறித்து புகார் அளித்தும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதே போல மதுரை வடக்கு அதிமுக எம்எல்ஏ ராஜன்செல்லப்பா தலைமையிலான அதிமுவினர் 200க்கும் மேற்பட்டோர் கடந்த நவம்வர் 8ம் தேதி சட்டம் ஒழுங்கு பாதிக்கும் வகையில் உரிய அனுமதியின்றி சட்டவிரோதமாக அண்ணாநகர் பிரியா காம்ப்ளக்ஸ் தியேட்டர் முன் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். (இந்த திேயட்டரில் தான் சர்கார் படம் திரையிடப்பட்டது). பிளக்ஸ் உள்ளிட்டவற்றை கிழித்து பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தினர். இதனால், போக்குவரத்து பாதித்தது. எம்எல்ஏவின் செயல் சட்டவிரோதமாகும். இது குறித்து புகார் அளித்தும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே, பொதுமக்களின் நலன் கருதி சட்டவிரோத விதமீறலில் ஈடுபட்ட சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மதுரை வடக்கு எம்எல்ஏ ராஜன் செல்லப்பா உள்ளிட்ட அதிமுகவினர் மீது வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” என மனுவில் கூறியிருந்தார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.
ada Ramasamy kilikkatha flex ah…..