அந்தமான் தொடர் தீவுகளில் அமைந்துள்ள ராஸ் தீவுக்கு நேதாஜி தீவு என்று பெயர் சூட்டினார் பிரதமர் மோடி. மேலும் சில தீவுகளுக்கு இந்தியப் பெயர்களை சூட்டினார்.
மேலும் நேதாஜிக்கு மரியாதை செலுத்திய பிரதமர் மோடி, சுற்றிலும் கூடியிருந்தவர்களிடம், தங்கள் செல்போன் டார்ச் லைட்டை ஒளிரவிட்டு, நேதாஜிக்கு வெற்றி என்று சொல்லச் சொல்ல, திரண்டிருந்த பொதுமக்களும் அவ்வாறே செய்தனர். இது காண்பவர்களை ஆச்சரியத்திலும், பிரமிப்பிலும் ஆழ்த்தியது. இதனைத் தன் டிவிட்டர் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார் பிரதமர் மோடி.
அந்தமானில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நேற்று வந்திருந்தார் பிரதமர் மோடி. அந்தமான் செல்லுலர் சிறைக்குச் சென்று இந்து மகா சபைத் தலைவர் வீரசாவர்க்கர் அடைக்கப் பட்டிருந்த சிறைச்சாலைக்குச் சென்று தியானம் செய்தார்.
பின்னர் அந்தமான் தொடர் தீவுகளில் சிலவற்றுக்கு ஆங்கிலப் பெயர்கள் சூட்டப் பட்டிருந்ததை மாற்றி, இந்தியப் பெயர்களாக மாற்றம் செய்து அறிவித்தார்.
அதன்படி, ராஸ் தீவுக்கு நேதாஜி தீவு என்று பெயர் மாற்றப் பட்டது. நீல் தீவு ஷாஹீத் தீவு என்றும், ஹேவ்லாக் தீவு ஸ்வராஜ் தீவு என்றும் மாற்றப் பட்டுள்ளது!
பொதுவாக ஆங்கிலேயர்களின் பெயர்களை பின்னர் காங்கிரஸ் அரசு மாற்றியதில்லை. அப்படியே மாற்றி ஒரு புதுப் பெயரைச் சூட்டினாலும், அதற்கு நேரு குடும்பப் பெயர்களே சூட்டப் படும். இப்படி ஒரு குடும்பத்தினரின் பெயர்கள் மட்டுமே சூட்டப்படும் ஆதிக்கத்தில் இருந்து மோடி அரசு நாட்டுக்கு விடுதலை அளித்துள்ளது.
நாடு விடுதலை அடைந்து 72 ஆண்டுகளுக்குப் பின்னர், நம் விடுதலைப் போராட்டத் தியாகிகளுக்கும், தியாகங்களுக்கும் கெளரவமும் , அங்கீகாரமும் கொடுத்துள்ளது மோடி அரசு! நேரு குடும்பம் மட்டுமே தேசத்துக்கு சொந்தம் கொண்டாடுவதை தவிர்த்து, நேதாஜிக்கு ஒரு அங்கீகாரமும் மதிப்பும் கொடுக்கப் பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சிக்கு உரியது என்று அந்தமான் வாழ் மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.