பணியிடத்தில் செல்ஃபோன் பயன்படுத்தும் காவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என டிஜிபி., டி.கே.ராஜேந்திரன் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார். முன்னதாக கடந்த மாதமே இப்படி ஒரு சுற்றறிக்கையை அனுப்பியிருந்தார்.
தற்போது அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், காவலர்கள் பலர் பணி நேரத்தில் தேவையின்றியும் அளவுக்கு அதிகமாகவும் செல்ஃபோன் பயன்படுத்துகின்றனர். இதனால் பணியின் போது தகவலைப் பெறுதல், சிந்தனை, கவனம், செயல்வேகம் உள்ளிட்டவை பாதிக்கப்பட்டு உரிய நேரத்தில் சரியான நடவடிக்கை எடுக்கமுடியாமல் போகிறது என்று கூறியுள்ளார்.
போக்குவரத்து ஒழுங்கின் போது செல்ஃபோன்கள் பயன்படுத்துவதால் வீதிமீறல்களை கவனிக்க முடியாமலும், தவறு செய்பவர்களை பிடிக்க முடியாமலும் போகிறது !
எனவே, முக்கிய பிரமுகர்களுக்கான பாதுகாப்பு, போராட்டங்கள், பண்டிகைகள், ரோந்து, விசாரணை, போக்குவரத்து ஒழுங்கு உள்ளிட்ட பணிகளின் போது உதவி ஆய்வாளர் அந்தஸ்துக்கு கீழ் உள்ளவர்கள் செல்ஃபோன்களை வைத்துக்கொள்ள அனுமதிக்கப் பட மாட்டார்கள் என்று கூறியுள்ளார் டிஜிபி.,!
முன்னதாக இதே சுற்றறிக்கை கடந்த மாதம் வந்தது. மேலும், காவல் நிலைய ஆய்வாளர்கள் தங்கள் பகுதி காவலர்களை ஒன்றிணைத்து வாட்ஸ் அப் குழுக்களை உருவாக்கி, அவர்களுக்கு ஊக்கம் கொடுக்கும் விதத்தில் ஆரோக்கியமான தகவல்கள், பாராட்டுதல்களை வழங்க வேண்டும் என்றும் ஒரு சுற்றறிக்கை இந்த மாதம் வந்தது.