ஜெயப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் அமலாக்கத்துறையினரின் கிடுக்கிப் பிடி விசாரணையில் உள்ளார் ராபர்ட் வதேரா.
நில மோசடி மற்றும் சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக சோனியா காந்தியின் மருமகனும் பிரியங்கா வதேராவின் கணவருமான ராபர்ட் வதேராவிடம் அமலாக்கத்துறையினர் நேற்று 9 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர்.
ஜெய்ப்பூர் அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரான ராபர்ட் வதேரா மற்றும் அவரது தாயார் மௌரீனிடமும் பல்வேறு கேள்விகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் எழுப்பி சில விளக்கங்களைப் பெற்றனர்.
இருப்பினும், மேலும் விசாரணை முடிவடையாததால், இன்று மீண்டும் ஆஜராகும்படி வதேராவுக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதனால் இன்றும் அவர் அமலாக்கத்துறையில் ஆஜராவார் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
தனது கணவர் ராபர்ட் வதேராவுக்கு பிரியங்கா வதேரா ஆதரவு தெரிவித்து கருத்து வெளியிட்டதால், இது தேர்தல் பிரசாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று காங்கிரஸார் கருதுகின்றனர். இருப்பினும் அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு வந்த வதேராவுக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியினர் கோஷம் எழுப்பினர்.