அரியலூர் கார்குடியில் சிஆர்பிஎஃப் வீரர் சிவச்சந்திரன் உடல் 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப் பட்டது.
காஷ்மீரில் வீரமரணம் அடைந்த தமிழக வீரர் சிவச்சந்திரன் உடல், அவரது சொந்த ஊரான அரியலூரின் கார்குடிக்கும், சுப்ரமணியன் உடல், அவரது சொந்த ஊரான தூத்துக்குடியின் சவலாப்பேரிக்கும் கொண்டு வரப்பட்டது. அங்கு, கிராம மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். கார்குடியில் சிவச்சந்திரன் உடல் 21 குண்டுகள் முழங்கிட அடக்கம் செய்யப்பட்டது.
பிப்.14 அன்று காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் இஸ்லாமிய பயங்கரவாதி அடில் தற்கொலைத் தாக்குதல் நடத்தியதில் 40 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். உயிரிழந்த வீரர்களின் உடல்கள், அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
தமிழகத்தைச் சேர்ந்த சிவசந்திரன் உடல் திருச்சி விமான நிலையம் கொண்டு வரப்பட்டு பின்னர் அங்கே பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. முதலில் ராணுவ வீரர்கள் மரியாதை செலுத்தினர். சிவசந்திரன் உடலை பார்த்து அவர்களுடைய சகோதரர்கள் உட்பட நான்கு பேர், உறவினர்கள் கதறி அழுதனர்.
மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன், கர்நாடாகாவை சேர்ந்த மத்திய அமைச்சர் அனந்தகுமார், திருச்சி மாவட்ட ஆட்சியர் ராசாமணி, அரியலூர் மாவட்ட ஆட்சியர் விஜய்லட்சுமி, சுற்றுலா அமைச்சர் நடராஜன், பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர் வளர்மதி, எம்.பி.க்கள் குமார், ரத்னவேல் மற்றும் பொது மக்கள் அஞ்சலி செலுத்தினர்.
பின்னர், அங்கிருந்து, சிவசந்திரன் உடல் அரியலூருக்கு எடுத்துச் செல்லப்பட்டது. ஏராளமான பொது மக்கள் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து சுமார் 4 மணி அளவில், அவரது உடல் கார்குடி கொண்டு செல்லப்பட்டது. அங்கு குடும்பத்தினர், உறவினர் கிராம மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், ஆனந்தகுமார் ஹெக்டே, தமிழக அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி மற்றும் அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து அரசு மரியாதையுடன் சிவச்சந்திரன் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இந்த இறுதிச்சடங்கில் உயர் அதிகாரிகள் மற்றும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பலர் பங்கேற்றனர்.