காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனைப்பெற்று ,தண்டனைக்காலம் முடிந்து பல ஆண்டுகள் கழிந்தபின்னரும்….
விஷ்ணு கார்கரே,கோபால் கோட்ஸே மற்றும் மதன்லால் பஹ்வா ஆகியோர் ,காந்தியை கொல்வது என்னும் தங்களின் தீர்மானம் தேசநலன் சார்ந்ததே என திடமாக நம்பினர்.
அந்த செயலில் ஈடுபட்டதை எண்ணி பெருமிதமே அடைந்தனர்.எந்த வருத்தமும் கொள்ளவில்லை.
இப்படியும் ஒரு விதமான கொள்கைப்பிடிப்பு !
ரெயிலில் கோபால் கோட்ஸேக்கு யோசிப்பதற்கு நிறைய நேரம் கிடைத்தது.
கைகளில் விலங்கிடப்பட்டு,முக்காடிடப்பட்டு,சுற்றி காவலர்களுடன்,தன்னையும்,தன் நண்பர்களையும் அடையாளம் காட்ட மதன்லால் பஹ்வாவை அழைத்து வந்த காட்சி,கோபால் கோட்ஸேயின் கண்முன்னே வந்து மனதை வாட்டியது.
தான் அந்த நிலையில் இருந்திருந்தால்…
பூனாவிற்கு திரும்பிச்சென்று மனைவியுடனும் தன் சிறு மகள்களுடனும்,கடந்த வாரத்திலிருந்த அந்த அமைதியான வாழ்க்கைக்கு திரும்ப வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.
ஆனால் இந்த கழிவிரக்கத்திற்கான காலம் கடந்துவிட்டது.
காந்தியை கொலை செய்ய வேண்டும் எனும் முடிவால் 17 வருட கால சிறைவாசம் அவரை எதிர்நோக்கி காத்திருந்தது.
தன் ரெயில் பயணத்தின் முடிவில் வேறொரு பெரிய இடி வந்திறங்கியது.
தாதர் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் இறங்கிய கோபால் கோட்ஸே பூனா செல்லும் ரெயிலுக்காக பிளாட்ஃபார்மில் காத்திருந்தார்.
அப்போது…
ரெயில்வே போலீஸ்காரர் ஒருவர் அங்கு வந்து அவரிடம் அவருடைய உடைமைகளைச் சோதனையிடவேண்டும் என்று கூறினார்.
ரிவால்வர்களும்,பயன்படுத்தாத வெடிகுண்டு ஆகியவற்றை வைத்திருந்த துணிப்பையை தவிர,அவரிடம் ஒரு ஹோல்டாலும் இருந்தது.
தன்னுடைய பயத்தை வெளிக்காட்டாதிருக்க முயற்சித்தவாறு,ஹோல்டாலை மெதுவாக திறந்து காட்டினார் கோபால் கோட்ஸே.
அதிலிருந்த துணிகளை கிளறிப்பார்த்துவிட்டு,அந்த போலீஸ்காரர் அங்கிருந்து சென்று விட்டார்.
திருடப்பட்ட சில பொருட்களை தேடிவந்திருந்த அந்த போலீஸ்காரர்,அது துணிப்பையில் கொள்ளாது,ஆகவே அதில் இருக்கமுடியாது என தீர்மானித்து அதைச் சோதனையிடவில்லை.
கோபால் கோட்ஸே பயணித்த ரெயில் கிர்கி ரெயில் நிலையத்திற்கு 22ந் தேதி மாலை 5 மணியளவில் போய் சேர்ந்தது.
வீட்டிற்குள் நுழைந்தவுடன் அறைக்குள் சென்று உள்ளே தாளிட்டுக்கொண்டு யோசிக்கலானார்.
முதலில் ரிவால்வர்களை எங்காவது பாதுகாப்பாக வைக்கவேண்டும் என்று எண்ணினார்.
ரெயிலில் பயணிக்கும்போதே,இரவு வேளையிலோ அல்லது ஒரு ஆற்றை கடந்து ரெயில் வந்துகொண்டிருந்தபோதோ ஜன்னல் வழியே அவற்றை வீசியெறிய வேண்டும் என்று ஏனோ அவருக்குத் தோன்றாமல் போனது.
இரவு 9 மணியளவில் தன்னுடைய .38 ரிவால்வரை எடுத்து,அதன் தோட்டாக்களோடு,திகம்பர் பாட்கேயின் துண்டில் சுற்றி ஒரு துணிப்பையில் எடுத்துக்கொண்டு பூனாவிற்குச் சென்றார்.
ஒரு மணி நேரத்தில் பூனாவை அடைந்தவர்,சதாஷிவ் பேத் எனும் இடத்தில் வசித்துவந்த குடும்ப நண்பர் ஒருவர் வீட்டிற்குச் சென்று கதவைத் தட்டினார்.
PANDURANG GODBOLE என்ற அந்த நண்பர் பின்னாளில் தன் வாக்குமூலத்தில் கூறினார் :
‘’ நான் கதவை திறந்தேன்.கோபால் கோட்ஸே தனியாக வந்திருந்தார்.ஒரு பொருளை என்னிடம் கொடுத்து வைப்பதற்காக வந்திருப்பதாக சொன்னார்.அந்த பொருள் ஒரு ரிவால்வர்.அதனோடு கூட சில தோட்டாக்களும் இருந்தன.ஒரு துண்டால் சுற்றப்பட்டு ஒரு கைப்பையில் அது இருந்தது.அந்த பையை என்னுடைய பெட்டிக்குள் நான் கொண்டு வைத்தேன் ‘’.
( தொடரும் )
#காந்திகொலையும்பின்னணியும்
எழுத்து: யா.சு.கண்ணன்