தமிழகத்தில் வருகிற 18-ந் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடக்கிறது. இதையொட்டி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
அவர் இன்று நெல்லை மற்றும் தென்காசி நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.
இதையொட்டி நெல்லை மற்றும் சங்கரன்கோவிலில் பொதுக்கூட்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. நெல்லையில் பாளையங்கோட்டை கோர்ட்டு எதிரே உள்ள பெல் மைதானத்தில் மேடை அமைக்கப்பட்டுள்ளது. அங்கு இன்று காலை 9 மணிக்கு பிரசார பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு நெல்லை நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் ஞான திரவியத்தை ஆதரித்து பேசுகிறார்.
இந்த நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு நெல்லையில் அவர் மதியம் ஓய்வு எடுக்கிறார். மாலையில் சங்கரன்கோவிலுக்கு புறப்பட்டு செல்கிறார்.
சங்கரன்கோவிலில் சுரண்டை ரோடு பால்பண்ணை எதிரே கலைஞர் திடலில் பிரசார பொதுக்கூட்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. இதில் மாலையில் தென்காசி நாடாளுமன்ற தொகுதி பிரசார பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு தென்காசி நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் தனுஷ்குமாரை ஆதரித்து பேசுகிறார்.
இந்த நிகழ்ச்சிக்கு நெல்லை மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் தலைமை தாங்குகிறார். முன்னாள் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, தென்காசி தொகுதி பொறுப்பாளர் கருப்பசாமி பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார் கள். இந்த மேடை அமைக்கும் பணிகளை தி.மு.க. நிர்வாகிகள் பார்வையிட்டனர்.