வேலூர் மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் மீது வருமான வரி சோதனை தொடர்பாக தேர்தல் செலவின உதவி அலுவலர், காட்பாடி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.
வேலூரில் போட்டியிடும் திமுக வேட்பாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்தனிடம் வேட்புமனுவில் குறிப்பிட்டதை விட அதிக அளவு பணத்தை வருமான வரித்துறை கைப்பற்றியுள்ளது; கதிர் அனந்த் மீது தக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்து, தேர்தல் செலவின உதவி அலுவலர் புகார் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, வேலூரில், துரைமுருகன் உள்ளிட்டோருக்கு சொந்தமான இடங்களில் இருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்ய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
துரைமுருகன் உதவியாளர்கள் வீடுகளில் ரூ10.57 கோடி பறிமுதல் செய்யப்பட்டது என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல் தெரிவித்துள்ளார். மேலும், மாஜிஸ்திரேட் அனுமதி அளித்ததும் வழக்கு பதிவாகும் என்று கூறியுள்ளார் சத்யபிரதா சாகு!
மேலும் வருமான வரித்துறையின் பரிந்துரை அடிப்படையில் வழக்குப்பதிவு செய்ய எஸ்பி முடிவு செய்துள்ளார். மாஜிஸ்திரேட் அனுமதி கிடைத்ததும் வழக்குப்பதிவு செய்யப்படும். இதன் அடிப்படையில், தலைமை தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கை அளிக்கப்படும். இதன் அடிப்படையில், தேர்தல் நடத்துவது குறித்து தேர்தல் ஆணையம் முடிவு செய்யப்படும்
தமிழகத்தில் இதுவரை நடந்த சோதனையில் ரூ.122.2 கோடி பணம், 812 கிலோ தங்கம், 482 கிலோ வெள்ளி, பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 128 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று கூறினார் சத்யப்ரதா சாஹூ.