கரூர் மாவட்டம், க.பரமத்தி காட்டுமுன்னூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜீவானந்தம் வயது 29. ஓர் ஆண்டுக்கு முன்பு இவருக்கும் நெரூர் சின்ன காளிபாளையத்தைச் சேர்ந்த செல்லமுத்து என்பவரின் மகள் அனிதாவுக்கும் திருமணம் நடந்தது. க.பரமத்தி அருகில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார் ஜீவானந்தம்.சில மாதங்களாக ஜீவானந்தமும் அவரின் உறவினர்களும் வரதட்சணைக் கேட்டு அனிதாவை கொடுமைபடுத்தியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று மாலை அனிதாவின் தாய் தமிழரசிக்குப் போன் செய்த ஜீவானந்தம்,`அவர்கள் மகள் தூக்கு போட்டு இறந்துவிட்டதாகவும்,. வந்து உடலை எடுத்துக்கொண்டு போகுமாறும் கூறியுள்ளார்.
இதைக் கேட்டு பதறித்துடித்த அனிதாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அனிதாவின் உறவினர்கள் நடந்த சம்பவம் குறித்து விசாரிக்கையில். ஜீவானந்தம் முன்னுக்குப் பின் முரணான பதில் அளித்ததால் சந்தேகம் அடைந்த உறவினர்கள், அனிதாவின் சாவில் மர்மம் இருப்பதாகக் கூறி க.பரமத்தி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.போலீஸார், அனிதாவின் உடலைக் கைப்பற்றி, கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே,கரூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு அனிதாவின் உறவினர்கள் அனிதாவின் சாவுக்குக் காரணமான கணவர் ஜீவானந்தம், அவரின் தாயார் லட்சுமி ஆகியோரை கைது செய்ய வலியுறுத்தி திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, ஜீவானந்தம், அவரின் தாயார் லட்சுமி ஆகியோர் வந்த வேனை அனிதாவின் உறவினர்கள் அடித்து நொறுக்கினர். தகவல் அறிந்து அங்கு வந்த கரூர் வருவாய் கோட்டாட்சியர் சந்தியா, இருதரப்பையும் சமாதானப்படுத்தி பேச்சுவார்த்தை நடத்தினார்.
பேச்சுவார்த்தையில், ‘அனிதாவின் பெற்றோரிடம் கார் வாங்குவதற்கு மூன்று லட்சம் ரூபாய் தர வேண்டும் என்று ஜீவானந்தம் கேட்டுள்ளார். அதற்கு அனிதா, ‘விரைவில் வாங்கித் தருகிறேன்’ என்று கூறியுள்ளார். அதற்குள் அனிதாவை வரதட்சணைக் கேட்டு கொடுமைப்படுத்தி கொன்றுவிட்டனர்” என்று அனிதாவின் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனராம்.
கரூர் டி.எஸ்.பி கும்மராஜா, “அனிதாவின் பிரேத பரிசோதனைக்குப் பிறகு, ஜீவனந்தம் கைது செய்யப்படுவார். மற்றவர்களைக் கைது செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று உறுதியளித்தனர். இருப்பினும் அனிதாவின் உடலை அவரின் உறவினர்கள் பெற்றுக்கொள்ள மறுத்துவிட்டனர்.
ஜீவானந்தம் குடும்பத்தில் உள்ள அனிதாவின் மாமியார் லட்சுமி மற்றும் ஜீவானந்தத்தின் பாட்டி ஆகியோரை கைது செய்த பிறகே, அனிதாவின் உடலைப் பெற்றுக்கொள்வோம் என அனிதாவின் உறவினர்கள் தெரிவித்தனர். ஒருவழியாக போலீஸார் அவர்களைச் சாமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.