ஹிந்தி சர்ச்சையால் தபால் துறை தேர்வுகள் ரத்து செய்யப் பட்டுள்ளதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது.
தபால் துறை பணியிடங்களுக்கு, ஆங்கிலம், இந்தியில் தேர்வு நடைபெற்றதை அடுத்து, தமிழகத்தில் அனைத்துக் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. இதை அடுத்து, கடந்த ஞாயிற்றுக் கிழமை நடந்த தபால் துறை தேர்வுகள் ரத்து என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அறிவித்துள்ளார்.
தமிழ் உள்ளிட்ட அனைத்து மாநில மொழிகளிலும் அஞ்சல் துறை தேர்வுகள் நடத்தப்படும் என்று ரவிசங்கர் பிரசாத் கூறினார்.
தபால் துறையில் ஆயிரம் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு கடந்த ஞாயிறன்று நடைபெற்றது. ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டும் தேர்வு நடைபெற்றதால் தமிழகத்தை சேர்ந்த தேர்வர்கள் கடும் சிரமத்தை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அஞ்சல் துறை தேர்வுகளை தமிழ் மொழியிலும் நடத்த வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகள் மத்திய அரசை வலியுறுத்தின.
இந்த விவகாரத்தை மாநிலங்களவையில் எழுப்பிய அதிமுக, திமுக எம்பிக்கள் அஞ்சல் துறை தேர்வுகளை தமிழ்மொழியில் நடத்தக் கோரி அமளியில் ஈடுபட்டனர்.
இதனால் மாநிலங்களவை 4 முறை ஒத்திவைக்கப் பட்டது. மீண்டும் பிற்பகலில் அவை கூடிய போது பேசிய மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், தமிழ் உள்ளிட்ட அனைத்து பிராந்திய மொழிகளிலும் அஞ்சல் துறை தேர்வுகள் நடத்தப்படும் என்றார். எனவே, ஜூலை 14 ஆம் தேதி ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டும் நடைபெற்ற அஞ்சல் துறை தேர்வு ரத்து செய்யப்படுவதாக அவர் அறிவித்தார்.