காஞ்சிபுரத்தில் அத்திவரதருக்கான பூஜை, சேவைகளைச் செய்ய வந்த அர்ச்சகர்களை போலீசார் உள்ளே விட மறுத்து, விஐபி வழியாக பொதுமக்களுடன் வருமாறு கூறியதால் வாக்குவாதம் ஏற்பட்டது.
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவிலில் அத்திவரதர் சேவை நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் அத்திவரதர் காட்சி அளிக்கிறார். இன்று 17ஆம் நாள் வைபவம் நடைபெற்றது. இதில் அத்திவரதர் மாம்பழ நிற பட்டாடையில் காட்சியளித்தார்.
அத்திவரதர் தரிசன நிகழ்வில் லட்சக்கணக்கான பக்தர்கள் ஒவ்வொரு நாளும் அத்திவரதரை தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் கோவில் வளாகத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், அத்திவரதருக்கு கைங்கரியம் செய்ய வந்த அர்ச்சகர்களை, உள்ளே விட அனுமதி மறுத்துள்ளனர். இதனால் அதிருப்தி அடைந்த அர்ச்சகர்கள், உள்ளே சேவைப் பணியில் இருந்து வந்த அர்ச்சகர்களுடன் சேர்ந்து, போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் அதிகாரிகள் வந்து, சமாதானப் பேச்சு நடத்தினர். தாங்கள் அத்திவரதருக்கான பணியைச் செய்ய வந்தவர்கள் என்றும், தங்களைப் பணி செய்ய விடாமல் போலீஸார் தடுப்பதாகவும் அவர்கள் முறையிட்டனர்.
அங்கே பாதுகாப்புப் பணியில் இருந்தவர்கள் வெளியூர் போலீஸார் என்றும், அவர்களுக்கு உள்ளூர் நடைமுறைகள் தெரியவில்லை என்றும் அதிகாரிகள் கூறி, சமாதானப் படுத்தினர். இதனால் அத்திவரதர் தரிசன நிகழ்வு சுமார் அரை மணி நேரம் பாதிக்கப்பட்டது.